கோவிலோ கூடமோ மாளிகையோ -இது
கொற்றவன் நிற்கவே மாடமதோ
மாவிலை கட்டிய தோரணமோ -இம்
மன்னவன் சாயச் சிம் மாசனமோ
தேரிலே சுற்றிடும் ஆனந்தமோ -அது
தென்றலேறி விளையாடிடுதோ
பூவிலே தொங்கும்பல் மாலைகளோ -இடை
பூத்ததும் வானத்துத் தாரகையோ
ஏறியே ஓடத்தான் மேகங்களோ -இந்த
ஏழையை சுற்றிநல் தேவர்களோ
கூறியே கொட்டினர் பூமழையோ -இவன்
கொண்டது வாழ்வில்அரி தல்லவோ
பேறிலே நல்லதோர் பேறிதுவோ -அவன்
பிரம்மனும் எண்ணாப் பெருங்கொடையோ
மாறியே கொள்ளும் பகலிரவோ -இம்
மாற்றம்மென் வாழ்வில் பெருங்கனவோ
அன்பினில் இனிய செந்தமிழே -என்
ஆவி கலந்திட்ட பொன்மகளே
என்பிலும் ஊடேஓர் தீஎரிதே -இதில்
இன்ப நினைவும் பெருகிடுதே
பொன்னெனும் வெண்ணிலா பூத்திருக்க -அயல்
பொய்கையில் நீரலை ஆர்ப்பரிக்க
சின்னஇசை பாடித் தென்றல்வர -அதில்
செவ்விதழ் பூமணம் சேர்ந்துவர
மின்னும் வண்ணவெடி மத்தாப்பென என்
மேனியும் இன்பமாம் பூச்சொரிய
கண்ணிலே ஆனந்த நீர் பெருக -இது
கனவேயென் றென்மனம் கேலி செய்ய
தன்னிலே சொர்க்கம் தரைநழுவி..வந்து
தாழுதே காலடி தாங்கிடுமோ
என்னிலேஅன்பு கொள் செந்தமிழே இனி
இங்கிவன் உன்மடிப் பிள்ளையன்றோ!
No comments:
Post a Comment