Saturday, October 23, 2010

அழுது புலம்பி !

 

எத்தனை நாளிந்த பொன்னெழிற் கட்டிலில்
         நித்திரை கொள்ளுவனோ
கத்தும் எருதேறும் காலன் வாசல்தனை
         தட்டும் வரைதானே
நித்தம் எழுந்து நான் நிற்பது பூமியா
       நிச்சயமா என்று கண்
கொட்டி விழித்து ஓர் பார்வை விட்டுபின்னர்
       கட்டிலை விட்டெழுவேன்

எப்ப எழுந்து  விழி திறக்க இது
    சொர்க்கம் என்றாகுதுவோ
சுற்றி நீள்பல்லொடு சூலம்பிடித்தோர் கை
      பற்றி இழுப்பனரோ
செய்த பிழையாவும் பட்டியலிட்டு எனை
   சுட்ட எண்ணெய் குளியல்
கத்தையான தொரு பாம்புகிடங்கினில்
     கட்டி இறக்கல் என

அத்தனையும் செய்து ஆனந்தமாய் ஆகா
    அற்புதம் என்று எமன்
கத்திக் குலுங்கி சிரிக்கும் நாளது
    பட்டென்று வந்திடுமோ
என்று மறுகி மனம் சலித்து இந்த
     மண்ணில் இருந்துவந்தேன்
எத்தனை நாள் இங்கு விட்டுவைப்பானென
      ஏதும் புரியவில்லை     

சத்தியமாக என் செத்திடும்நாள் குறி
  கேட்டும் தெரியவில்லை
சாத்திரம் சாதகம் ஜோதிடம் என்று
    பார்த்தும் பயனொன்றில்லை
இப்படியே பல எண்ணங்களோடு
    இங்கிவன் நான் இருக்க
குன்றுமலையென தோள் நிமிர்ந்த ஒரு
     மல்லன் என் தோழனவன்

நேற்றைக்குமுன்தினம் நீண்டுபடுத்தவன்
    மூச்சை நிறுத்திவிட்டான்
சொத்து பணம் வீடு கட்டியவள் பிள்ளை
     அத்தனையும் மறந்தான்
நித்திலம் விட்டுமறைவதுமானிடர்
   நிச்சயம் என்பதனால்
செத்த சினேகிதன் எண்ணி ஒருசொட்டு
  கண்ணீர் விழவேயில்லை

கண்டவரோ இவன் கல்நெஞ்சனென்று
   கணக்கிடலாம் அறியேன்
என் மனதோ நீ முந்திவிட்டாய்
    நான் பிந்திவருவேன் என்குது  
போவது ஓர் இடம் போவதும் திண்ணம்
    பார்ப்பது ஓர்படம்தான்
ரிக்கட் வரிசையில்நீ முந்தி நான்பிந்தி
    நிற்பதுபோல் இதுதான்

ஏனழுது புலம்பிக் கதறணும்
    வேடிக்கை யாகுமடா
போனவரை பார்த்து போக இருப்பவர்
    புலம்பி அழுவதோடா
ஆண்டவன் தந்ததை மீண்டுமெடுக்கிறான்
      என்றான் கவியரசன்
மீண்டும்தா என்று மிஞ்சியும் கெஞ்சியும்
      மீள்வது  அல்ல உயிர்

நீசம் மலிந்திட்ட பூமியை விட்டவர்
   செல்லும் இடம் தெரியா
ஆயினும் நிச்சயம் அங்கவர் காண்பது
     இவ்வுலகைவிட்டமேல்
போயின கண்டு புலம்பிஅழு தவர்
    மேனி விழுதல் விட்டு
ஆம் இவன் மீளா அமைதி கண்டான் என
     அஞ்சலி செய்து விடை கொடுப்போம்

No comments:

Post a Comment