Monday, September 20, 2010

அழகான வெண்ணிலவே!

ஆயிரம் தாரகை பூத்த வானமதில்
நீந்திடும் வெண்ணிலவே
ஆடிஅசைந்து நீ போவதெங்கே
அழகான ஒளிநிலவே
ஓடிடும் வான்முகில் பக்கம்வர நீயும்
உள்ளே மறைவதென்ன
ஈழமண்ணில் தமிழ் கொல்லும்கொடுமையை
காணக்கண் கூசியதோ

கையில் குழல்வெடி கத்திஎன தமிழ்
கொல்ல பகைவர் செல்ல
மெய்யில் பயம் கொண்டு மேகம் எடுத்து நீ
உன்னை மறைத்தனையோ
விண்ணில் தலைதெறித்தோடுகிறாய்
அழகானதோர் வெண்ணிலவே
மண்ணில் தமிழர் கதியிழந்தோடிடும்
இன்னிலை தான் உனதோ

மெல்ல நீ தேய்ந்து மெலிந்து பிறையென
ஆவது ஏன் நிலவே
வாழ்வை இழந்துநாம் வாடுவதைக்கண்டு
தேகம் மெலிந்ததுவோ
அன்னை இழந்து தந்தையிழந்து
ஆயிரமாய் சிறுவர்
கண்ணீர் விட்டுமந்த தெய்வம் இரங்கிடக்
காணோம் என் செய்வதடி
 
பால் நிலவில் அன்று தாய் அமுதூட்டநீ
பார்த்து மகிழ்ந்திருந்தாய்
போலஇனி ஒருநாள் இந்தப் பூமியில்
மீண்டும் மலர்ந்திடுமோ?
தாயொரு கூட்டிலும் பிள்ளை தனியவும்
பாவி பிரித்து விட்டான்
நீயதை எண்ணி நெஞ்சம் துடித்தாயோ
நேற்று வரமறந்தாய்

பாயும் கருமுகில் பேயென பார் அங்கே
பக்கம் ஓடி வருது
ஆயினும் வந்தது போல மறுதிசை
ஓடி உனை விடுது
ஈழமண்ணை வந்து மூடும் இருள்முகில்
போக மறுப்பதென்ன
வாழும் மனிதரின் நாடு சுதந்திரம்
ஆட்சி பறித்ததென்ன

ஓடும் நிலவே நீ போய்வரும் வீதியில்
தேசம் இருந்ததென்றால்
வாடும் உறவுகள் காதில் ஒரு மொழி
கூறி ஒளி எறிவாய்
நாடும் உயிர்களும் காக்க எண்ணியிங்கு
நாமும் எழுந்து நின்றோம்
பாடுபடுவோம் பகைகொண்ட நாட்டினை
மீட்டு அரசமைப்போம்

No comments:

Post a Comment