Tuesday, October 19, 2010

கண்டோம், ஆயின் கண்டிலோம்

வானம் பொழிந்து விளைந்துமென்ன -பூவின்
  வாசமெழுந்து மலர்ந்துமென்ன -குயில்
கானம் இசைத்துமே கண்டதென்ன -நம்
  காயும் நிலம் ஈரம் காணலையே
 
விண்ணில் நிலவு எறித்துமென்ன -குளிர்
  வீசுந் தென்றல் உடல் நீவியென்ன -சிறு
தண்ணொளி பூமி தழுவியென்ன - எங்கள்
  தர்மம் பிழைத்திடக் காணலியே


தேனைக் கடித்து இனித்துமென்ன -நல்ல
   தீந்தமிழில்கவி சொல்லியென்ன -வட்டப்
பானை பிடிக்குமெம் மங்கையர்கள் அவர்
   பாவம் விமோசனம் காணலையே

கோவிலைச் சுற்றி நடந்துமென்ன ஒரு
  கோபுரம் கட்டி வணங்கியென்ன சிறு
பூவிலே மாலைகள் இட்டுமென்ன மண்ணுள்
  போனவர் எண்ணம் பலிக்கலையே

ஆயுதம் தூக்கி எறிந்துமென்ன -பெரும்
  ஆள்படை சேனைய ழிந்துமென்ன -ஒரு
காகிதம் சட்டம் கடும்விதிகள் -சொல்லி
  காட்டியவர் நீதி காக்க வில்லை
 
வாழ்வைஅழித்தவர் கண்டதென்ன - எண்ணி
  வஞ்சம் இழைத்தவர் கொண்டதென்ன -அவர்
ஆயுள் முடிந்து நடக்கையிலே - அள்ளி
  அத்தனையும் கொண்டு போவதுண்டோ
 
கொண்ட உடையதும் சொந்தமில்லை அவர்
  கூட உடலுமே செல்வதில்லை புகழ்
கண்ட பதவியும் காசுகளும், அவர்
   கையிலெடுத்து விரைவதில்லை
 
கொன்று குவித்து உயிரெடுத்துத் - தம்
  கூட்டம் பிழைத்திட ஆடுகிறார் அதில்
வென்று குவிப்பது சாபங்களும் அவர்
  வீடு நிறைந்திடப் பாவங்களே!

மண்ணில் ஈதெங்கும் நடப்பதென்ன -ஒரு
  மண்ணும் புரியல்லை மாதேவனே- இங்கு
கண்ணியம் காப்போர் கருகிவிட வெறும்
   காதகர் வாழ்வதன் காரணம் ஏன்?

No comments:

Post a Comment