Monday, September 20, 2010

கவிபாட வரம் தா !

கலை காணுமுலகோடு இனிவாழவேண்டும்
கவியான தெனதாசை மகளாக வேண்டும்
தலைவாரி குழல்நீவி தமிழ்மாலைசூட்டி
அவள் பாடுமெழில்கண்டு மனம் தூங்கவேண்டும்

மலைமீது நதிமீதும் அவளோடு சென்றே
இதுதானே அழகென்று இசைபாடவேண்டும்
அலையோடு குளிர்நீரிற் தலை நீட்டு மல்லி
அதன் மேவுமிதழாக இதமாக வேண்டும்

எவர் காணும் பொழுதேனும்  இவளா என்றள்ளித்
தமிழாம் என்கவிதூக்கி முகம் காணவேண்டும்
எழிலா நல்லிசையா அல்லதுகாணும் பொருளா
எதுதானும் உயர்வென்று நிறைகூறவேண்டும்

அழகான நகைசூடி அணியாடை வளைகள்
அலங்கார வகைசெய்து மகிழ்வாதல்போல
வளமான உவமை நல்லெது கையும்மோனை
இதனாலே எழில் செய்து உயர்வாக்கவேண்டும்

தளைசீர் கள்கொடியாக உருவாக்கி ஊஞ்சல்
தனில் ஏற்றி அவளை நான் தாலாட்டவேண்டும்
இமை கொட்டும் விண்மீன்கள் எவைமட்டுமுண்டோ
அது மட்டும் அளவாக கவி காணவேண்டும்

எதுதானும் உனதன்பின் அருளின்றி இறைவா
ஒருபோதும் உருவாகா மனதெண்ணும் கவிதை
எனவே உன் அடிதாழ்ந்து தலை வைத்து இரந்தேன்
கவிபாடி உலகெங்கும் வலம்செல்ல வரம்தா

No comments:

Post a Comment