Tuesday, October 12, 2010

கண் விழித்துக் கண்ட கனவு

மாலைப் பொழுதினில் ஓர்நாள் - மன
     தில் பல எண்ணங்கள் கொண்டு
சாலை வழிதனிற் சென்றேன் - நல்ல
     சங்கீதம் கொண்டு குருவிகள் பாட
சோலைமலர் மணம்வீச - நல்ல
     சுந்தரத் தென்றல் அதைஅள்ளிப் போக
வேலைமுடிந் தெங்கும் வீடு - செல்லும்
    வீறுகொண் டேகும் மனிதர்கள் கண்டேன்.

சீறிச் சினத்தவள் கன்னம் = போல
    சிவ்வென்று வண்ணம் எடுத் தடிவானம்
மாறிக் கிடந்தது வெய்யோன் - இந்த
     மண்ணில் கொடுமைகள் தன்கதிர் மீறி
தேறிக் கிடக்குதே யென்று - நொந்து
     மேலைக் கடலில் உயிர்விடும் நேரம்
பூரிப்பு டன்மனம் துள்ளி - புள்ளி
       மானைப் போலக் குதித்தது கண்டேன்.

அந்தி கருகிடும் நேரம் - இருள்
      ஆடி, அசைந்து புவி கொள்ளும் நேரம்
மந்த மயங்கியோர் இன்பம் - கள்ளை
       உண்டவன்போல உணர்வதைக் கண்டேன்
செந்தமிழில் இசைபாடி - பல
       தெய்வத் திருத்தலம் எங்கும் பண்ணோசை
முந்திஎழ, அந்தமேகம், - அதை
        முட்ட எழுந்தநற் கோபுரம் கண்டேன்

இத்தனையும் கொண்டு இன்பம் - நெஞ்சில்
          எட்டி அலைமோத என்வழி சென்றேன்
எத்தனையோ அழகாக - இந்த
          ஊரை உலகைப் படைத்தவன் செய்தான்
வித்தைகள் அன்றோ புரிந்தான் - என்று
           வீறுநடை கொண்டு ஏகிடும்போது
பத்தைசிறு மரக்காடு - அதன்
           பக்கத்தி லோர்சுடு காட்டினைக் கண்டேன்

நட்ட நடுவினில் வேகும் - மரக்
        கட்டையி னுள்ளே கிடந்தது தேகம்
சுட்டெரியும் தீயின் வாயில் - அந்த
        சுந்தர தேகம் எரிவது கண்டேன்
இந்த மனிதனும் நேற்று - இந்த
        இன்ப உலகினைக் கண்டுகளித்தான்.
இன்று அவன் வெறும் கூடு - அது
        மண்ணில் கலந்து மறைந்திடப் போகுது

அத்தனையும் வெறும் மாயை - இங்கு
      ஆடும் களிப்பு நடனங்கள் யாவும்
வித்தகன் ஆண்டன் மேடை - தனில்
       வேடிக்கைக்காக விளையாடும் பொம்மை
நித்திலம் என்பது இல்லை - இங்கு
       நிரந்தரம் என்பதுசற்றேனும் இல்லை
செத்து மடிந்திட சூழும் - இருள்
        மட்டும் நிரந்தரம் என்றெண்ணி நொந்தேன்

பொன்னென பூத்த இவ்வானம், - அதில்
         போகும்வெள்ளி மலைபோன்ற வெண்மேகம்,
விண்ணில் பறக்கும் குருவி, - இந்த
          வீதி,மரம், ஓடிச்செல்லும் மனிதர்
தண்ணீர்க் குளத்தின் அலைகள்,- ஆடும்
           அல்லி மலர், கயல்மீன்கள் இவைகள்
கண்மூடும் மட்டுமே தோன்றும் - வெறும்
          ஞாலக்கனவுகள் என்பதை கண்டேன்

மாலை முடிந்திருள் கவ்வ - நாம்
       பாயிற்படுத்து தூங்கிடக் காண்போம்
காலையில்மீண்டும் எழுந்து - நாம்
      கண்ணை விழித்திட இன்னொன்று காண்போம்
யாவும்கனவுகள் கண்டீர் - கண்
        மூடித்திறந்தென காண்பது ரண்டு.
 ஒன்று விழித்திடப் போகும் - இன்
        னொன்று விழிகளை மூடிடப்போகும்

No comments:

Post a Comment