பாடவா பிறந்தேன் பறிபோன நிலம் கண்டு
வாடவா விளைந்தேன் வலியின்றி நிலைகெட்டு
ஓடவா இருந்தேன் முழுநாளும் மண்காத்து
தேடவே சுதந்திரமன்றோ பிறந்தேன்
வீழவா பிறந்தேன் வெறும்பாயில் நோயாகி
மாளவா கிடந்தேன் மனங்கொண்ட உரம்செத்து
தாழவா வந்தேன் தனியீழம், தன்னாட்சி
மீளவே உருவாக்க வென்றோ பிறந்தேன்
பணியவா வாழ்ந்தேன் பகையோடு சேர்ந்தாடிக்
குனியவா கொண்டேன் கூடாது தமிழ்மீது
இனி அவா கொண்டே இடர்நீக்கிப் போராடி
துணியவே யன்றோ பிறந்தேன்
பிறப்பே மறந்து பகைவனாம் எதிரியின்
சிறப்பே இரந்து செத்திடும் தமிழவன்
புறத்தே எழுகின்ற பெருவீர மழித்திடும்
குறைவான பிறவி கொள்ளலாமோ?
பகைவனின் கையில் பற்றியோர் கத்தியின்
வகையான பிடியாய் வாழ்வதைப் பிறர்நோக்கி
நகையான உறவே! நம்தமிழ் அழிந்திடில்
புகையாகப் போவதுன் வாழ்வே!
ஒன்றாக நின்றோம் ஒருசேரத் தமிழ் பாடி
வென்றே மகிழ்ந்தோம் விளையாடி மண்மீட்டுச்
சென்றே படைத்தோம் செந்தமிழ் ஈழமாம்
என்றோர் சரித்திரம் செயவா!
நஞ்சே எடுத்தோம் நல்லவர் அமுதிட்டு
வஞ்ச மிழைத்தோம் வாழ்வினைப் போக்கிட
அஞ்சிக்கிடப்போம் அடிபற்றி பகைபோடும்
கஞ்சி குடிப்போமென் றானதேனோ?
தமிழ்என்றுகூறத் தாழ்ந்த தலை நிமிராதோ
பழியென்றுகூறப் பாய்ந்து வாள் தூக்காயோ
அழிவென்று கூற அலறி நீ சீறாயோ
இழிவினைக் கண்டுமே இருப்பவன் தமிழோ?
No comments:
Post a Comment