Monday, October 11, 2010

நீல வானில் நீந்துவேன் !

நீலமேகமதில் ஆயிரம்தாரகை
     நீந்திட எங்குமொளிப் பிழம்பு
காலவெளி விண்ணின் மாயகுழம்பினில்
    காணும் சிவப்பொளி மஞ்சளுடன்
ஊதாக் கடும்நீலம் உள்ளதொரு அண்டம்
    உள்ளே வெளிதாண்டி ஓடுகிறேன்
காது ஓம் என்னுமோர் ரீங்கார ஓசையில்
   காற்றில்லா ஆழத்தில் நீந்துகிறேன்

சட்டென்று சத்தமோர் நட்சத்திரம் வெடித்
     தெங்கும் ஒளிச் சீற்ற மூடுருவ
வட்டக்குழம்பிலே பற்பலவண்ணத்
     துகள்கள் பரந்தென்னைச் சுற்றிவர
வெப்ப மெழுந்தென்னைச் சுட்டுவிடஒரு
    நீலக்கரும்குழி தானுறிஞ்ச
குப்புற வீழ்ந்து சுழன்றுதொலைகின்றேன்
    சட்டென்று கண்ணை விழித்துவிட்டேன்

காணும்பகற்கன வாலெழுந்து ஒரு
    கட்டிலில் சாய்ந்து முகில்களினை
வானில் குரங்காக வண்ணத்துப் பூச்சியாய்
    வட்ட முகமாய் வடிவெடுக்கும்
மீளப் பரந்து உருக்குலைந்துபஞ்சாய்
    மெல்லிய மேகம் பறந்துசெல்லும்
கோலம் ரசித்துகிடந்தேன் அடஆங்கே
    தேவதையொன் றெழில் வானில்வந்தாள்

அந்தோஅழகிய தேவதையே வெண்மை
    ஆடைகள் பூண்ட எழிலரசி
எந்தன் மனதினில் கேள்வி யொன்றுஇந்த
    மண்ணில் வந்து நானும் ஏன்பிறந்தேன்
எங்கேயிருந்து பிறந்து வந்தேன் மீண்டும்
    எங்குசென்றே அமைதி கொள்வேன்
அங்கே யிருப்பது என்ன இந்தப்பெரும்
    ஆழவிண்ணின் வெளிகண்டதென்ன

வானோ பிரபஞ்சமா யாக்கி விரித்ததில்
    வண்ணக் குழம்புகள் வைத்தது யார்
ஏனோ இதுமர்மமென்று இருப்பதன்
    காரணமென்ன அறிந்துளயோ
ஆவி துறந்ததும் அண்ட வெளியினில்
    நாம்போகு பாதையோர் பால்வெளியோ
தாவிப் பறந்துவான் கல்லிற் படாமலே
    தூரம் சென்றேநாம் உறங்குவமோ

சூரியன்கள் பலதாண்டி வெறுமையில்
    காற்றுமில்லாப் பெரும் சூனியத்தில்
சீறிவரும் ஒளிச் சீற்றங்கள் மத்தியில்
    செல்லும் இடம்வெகு தூரமாசொல்
நெல்லை விதைத்து கதிர்வளர்ப்போமது
    முற்றியதும் அன்னம் உண்பதற்கு
கல்லை யுடைத் தில்லம் கட்டுகிறோம்குளிர்
    காற்றும் விலங்கும் தவிர்ப்பதற்கு

ஆனசெய லெல்லாம்காரணத் தோடுதான்
    ஆயின் பிறந்திட்ட காரணமென்
மேனி எடுத்திந்தப் பூமியில் வந்ததால்
    யாருக்கென்ன பயன் என்று கேட்டேன்
வானில் தெரிந்திட்ட தேவதையோஒரு
    வண்ணத்தடியினைக் கையெடுத்தாள்
தேனில் குழைத்திட்ட மென்குரலாலொரு
    சேதி சொல்லியொரு கோடுபோட்டாள்

சின்ன மனிதனே உன்னைப் படைத்தவன்
    விண்ணில் பரந்தெங்கும் வாழுகிறான்
பொன்னில் நதியினில் பூவில் குழந்தையில்
    பூமியெங்கும் அவன் ஆளுகின்றான்
மின்னு மிடியையும் மேகத்து நீரையும்
    அள்ளி யெடுத்துப் பொழியவைத்தான்
இன்பமிழைத்து மகிழவைத்தான் பின்பு
    துன்ப மெதுவென்று கொள்ளவைத்தான்

கண்ணைவிழித்து கிடக்குமட்டுமொரு
    காரணமேதும் பெரிது இல்லை
கண்ணைமூடி உயிர் சென்றுவிட்டால் இந்தக்
    காயமழிந்திட ஆவது என்?
விண்ணின் திருமகள் வேடிக்கையாய்
    நகைசெய்து சுடரெழும் பூவிழிகள்
எண்ணிச்சிரித்திட ஈதுசொன்னள்அந்த
    இன்பக் குரல்மணிநாதமெழ

மண்ணில் விளைந்திட்ட உன்னுடல் மீண்டும்
    மண்ணுக்கென விட்டுஏகிடுவாய்
விண்ணில் பறந்து, உலவி விளையாடி
    வேண்டும்வரை சுகம் காணுகிறாய்
கண்ணில் தெரிகின்றகாட்சியெல்லாம் கடு
    வண்ணமலரின் வடிவங்களாம்
விண்ணின் பெரு வாண வேடிக்கை என்பது
    வேண்டும்வரை காணும் இன்பங்களாம்

மண்ணில் கொடுமைகள் செய்தவரோ பெரு
    மாயக் குழம்பினில் சிக்கவைத்து
கன்னிச் சிவந்திட வெப்பமிட்டுஅவர்
    காது கிழிந்திடச் சத்தமிட்டு
பொன்னைப் புடமிடச் செய்வது போலவர்
    பொல்லா மனதைப் புடமிடுவோம்
முன்னர் இழைத்திட்ட பாவங்கள் தீர்ந்திட
    மீண்டும்பிறந்திட செய்துகொள்வோம்

என்ன இழைத்துமே ஏது பயனவர்
    இத்தரை மீண்டதும் செய்வதெல்லாம்
கன்னமிடுதலும் பொய்கொலையும்ஓர்
    காரணமின்றிக் கொடுமைகளே
சொல்லச் சிறுதடி மீதிருந்துஒரு
    சின்னப்பொறி எழுந்தேபரவ
இல்லையென அவள் ஆகியிருந்தது
    வெள்ளைமுகிலும் விண்நீலமுமே!

மெல்லவிழிகளைமூடிநின்றேன் இந்த
    மேதினி மீது நடப்பதென்ன
சொல்லிய தேவதை உண்மையிலோ அல்ல
    சொப்பனமோ புரியவில்லை
தொல்லையிலா வாழ்வுக் கென்றேபல சில
    விஞ்ஞான ஆய்வில் கருவி கண்டோம்
செல்லை கணனியை சின்னத்திரை கண்டு
    இன்பமாக வாழ்வை மாற்றிவிட்டோம்

ஆயினும் எத்தனை பெற்றும் மனிதர்கள்
    அன்பினை மட்டு மிழந்துவிட்டார்
நாயினும் கேவல மாகச்சண்டை யிட்டு
    நாட்டைப் பிடித்திடக் கொல்லுகிறார்
யுத்தம் அரசுகள் செய்யும் கொலைகளை
    கேட்பதற்கு இங்கு யாருமில்லை
ரத்தம்துடித்து அடங்கும்வரை கையில்
    கத்தி எடுப்பவன் தானே இறை

எத்தனை நல்லவன் நேர்மைகொள்வோன்தமக்
    கிவ்வுலகில் நீண்ட ஆயுளில்லை
மொத்தத்தில் ஏது நடக்குது மானிட
    வாழ்வுதனில் என்று தோன்றவில்லை
நேர்மை நீதியற்ற வாழ்விதை விட்டுஅந்த
    நீண்ட வெளிதன்னில் நீந்துகிறேன்
மீளப்பிறந்திங்கு வாழப்பிடிப்பில்லை
    தேவதையே கொஞ்சம் நில்லுஎன்றேன்

No comments:

Post a Comment