Saturday, October 27, 2012

ஒருநாள் ராஜா 2


தேவஎழிற் பூவையர்கள் தீந்தமிழ் பாட
தென்திசையின் காற்றுவந்து தேகம்தொட்டிட
கூவியொரு சங்கொலித்து கொள்புகழ்போற்ற
கொற்றவனென் பக்கமொரு கோதையும்காண
தேவிமலர் சூடியயல் தென்ற லென்றாக
தேன்நிறைந்த கிண்ணமதை தேவதை சேர்க்க
யாவு மினி தென்றொருவர் ஆளுமை போற்ற
யௌவனத்து பெண்சுழன்று நாட்டியமாட

மேவியெழு வான்சுடர்போல் வீர மார்பதை
மென்னிதழ்கொள் கன்னியர்பூங் கைகள் தொட்டிட
மாவிருந்து வீழ்ந்தகனி மாதர் கன்னமும்
மையிதழ்கள் பேசியெனை மகிழ்வினில் ஆழ்த்த
நாவினித்த கனிபிளந்து நங்கையர் ஊட்ட
நடையமைந்த ராஜகளை நற்புகழ் சேர்க்க
தேவர்களும் பூஎறிந்து என்பெய்ர்கூற
தோன்றுசுகம் இன்பமன்றோ இன்பமேயன்றோ

பால்நிலவில் மாடமதில் பைங்கிளியாட
பனியெழுந்து குளிர்நடுக்கி போர்வையைத் தேட
வேல்விழியாள் மான் பயந்து வெகுண்டது போலும்
விளங்க பெருந்தீ எழுப்பி வெம்மையில் காய
நால்திசையும் போர்முரசு சங்கொலி கேட்க
நாடு கொள்ள வந்தவனும் நடுவினில் தோன்ற
கால் நடக்க கைஉருவி வாளினைத்தேட
காலைவெயில் சுட்டது நான் கண்களை விழித்தேன்

No comments:

Post a Comment