Tuesday, September 11, 2012

விடுதலைப் பாடல்

பொங்கி யெழுங்கடி பொங்கிஎழு  இனிப்
போதும் பொறுத்தது பொங்கியெழு
எங்களினம் மொழி காக்க இனித் தமிழ்
ஏற்ற மடைந்திடப் பொங்கியெழு

சங்குமுழங்கிடக் கேட்குது பார் அங்கு
சந்தியிலே கொடி ஏற்றினர் காண்
பொங்க முழக்கிய ஓசை முரசமொலி
பின்னே யெழுந்தது பொங்கியெழு !

இல்லமெங்கும் உணர்வோடிக் கொதிக்குது
எத்தனை வேகம் இதை வந்து பார்
வெல்லவென ஒளி வானில் எழுந்தது
வீரியம் கொண்டனர் பொங்கியெழு

சொல்லப் பெருந்தொகை மாந்தரெனப்  பல
செந்தமிழர் குலம் வந்தது காண்
வல்லவராய்த் திரண்டோடி எதிர்கொள்ளும்
வாழ்வில் துயர்நீக்கப் பொங்கியெழு

மெல்லத் திரும்புது எங்கள் இனித்தமிழ்
மேன்மைக் குலத்துடை வாழ்வதுகாண்
கல்லை கரைத்தனை கச்சிதமாய் இனிக்
காலமெமதடி பொங்கியெழு

அல்ல லிழைத்த அரண்மனையில் அவர்
ஆட்டம் ஒழிந்திடக் கொள்ளையரும்
பல்லுல கும்பழி செய்தவரு மெங்கள்
பைந்தமி ழர்முன்னே மண்டி யிட்டார்

சொல்லை யிழந்தவர் பேச்சிழந்து பணி
செய்தலெனப் பல பொய்யுரைத்து
நல்லவர் கண்களை ஏய்த்தவர்கள் இன்று
நாணிக் குனிந்தனர் பொங்கியெழு

நெல்லைவிதைத்தவர் நெல்லறுப்பர் -கடும்
சொல்லை விதைப்பவர் சீரழிவர்
நல்ல விதைத்தவர் நாமல்லவோ - இதை
நானிலம் கண்டிடப் பொங்கியெழு

1 comment:

  1. வீரமிகு வரிகள்... உற்சாகம் பிறக்கிறது... வாழ்த்துக்கள்...

    ReplyDelete