Saturday, November 17, 2012

தமிழைத் தவிக்க விடலாமா?



ஒன்று பட்டாலுண்டு வாழ்வு - நம்மில்
ஒற்றுமை நீங்கிடின் விளைவது கேடு
என்றுமெம் தமிழ்மனம்மீது - நிதம்
ஏற்படும் பிரிவினை ஏனிந்தக் கேடு
நன்றி கெட்டே பகையோடு - இவர்
நடந்திடும் உறவுகள் நாட்டிற்கு ஊறு
தொன்று தொட்டே தமிழோடு - இந்த
துயர்தரும் சரித்திரப் பலகதையுண்டு

மனமது பண்படவேண்டும் - அதில்
மலர்வது உணர் வுடல் மாளிகை போலும்
கனஎழில் வண்ணங்கள் தூங்கும் - அதில்
காட்சிகள் கற்பனைச் சரங்களும் ஆடும்
இனமொழி யுணர்வுகள் மேலும் - அதில்
இருப்பது பொன்னுடை நகைக ளுமாகும்
உனதெழில் அணிந்திடக் கூடும் - இவ்
வுலகதில் தமிழது  உயர்வென ஆகும்


உணர்வுக ளிருந்திட வேண்டும் - உன்
உதிரத்தை  உறைத்திடும் சுரம்கொள்ள வேண்டும்
தணலென மனம்கொள்ள வேண்டும் - அத்
தகிப்பினில் உதிரமும் சுடும்நிலை வேண்டும்
மணமற்ற மலர்களைப் போலே - நீ
மதியற்ற செயலினை மறந்திட வேண்டும்
குணந்தனில் தமிழ் எனும் பெருமை - உன்
குருதியில் சிவப்பெனும் நிறந்தர வேண்டும்

இழிவதில் இறப்பதுமேலாம் - நீ
இருந்திடில் உறுதிதன் மானமும்வேண்டும்
பழிஎனும் பெயரையும் தாங்கி - நாம்
பலதுறை நடப்பினும் தாய் ஒன்று ஆகும்
வழிபல போய்ப் பணம் தேடு - நீ
வருவது பகையெனில் தமிழ் எனக்கூடு
மொழியுன தறிவினில் தருமே - அது
முழுமை யிலிலையெனில் அகந்தனில்குருடே

இவன் ஒரு தமிழன் என்றுலகில் - நீ
எதுமுனை காணினும் உனதெழில் பெயரே
தவழ்திடும் பொழுதினி லிருந்து - நாம்
தரைவிடும் வரைதனும் தமிழென ஒன்றே
எவனினம் தமிழ்தனைப் பழிப்போன் - அவன்
எதிரியென் றுணர்; உன தாயவள் தன்னை
அவ மரியாதை  செய்திழுத்தே - அவன்
அழகினைகெடுத்திடும் அரக்கனைஎன்றும்

மனமது மன்னிக்கலாமோ - அவன்
மணிமுடி கொள்ளினும் மறந்திடப் போமோ
சினமது எழுந்திட வேண்டும் - அவன்
செயலினை நிறுத்திட உணர்வெழ வேண்டும்
இனமிவன் தமிழென இழிய - நீ
இளித்தவன் கரம் பற்றல் எதுவிதம்- அன்னை
தனிலன்று பால்குடித்தாயோ - இல்லை
தரம்கெட மதுவுடன் விசம் குடித்தாயோ

தமிழெனில் உயிரென எண்ணு - உன்
தாயினும் சிறந்தவள் மொழிஎன்று கொள்ளு
அமிழ்திடும் தாய்சில காலம் - உன்
அகமதில் ஒலித்திடும் தமிழ்முழுவாழ்வும்
தமிழினை மறந்தவன் இழியோன் - அவன்
தொடுமிடம் எங்கணும் விசமெனும் கொடியோன்
தமிழ்தனை விற்பவன் மூடன் - அவன்
தரணியில் புழுவிலும் இழிவெனும் தேகன்

திருந்திடு தமிழ்தனை எண்ணு - நீ
தேன்சுவைத் தமிழினை உயர்த்திட நில்லு
வருவது பெருந்தொகையென்று - உன்
வாழ்வினை எண்ணிடில் பெருதவறொன்று
தருமமும் நீதியும் வெல்லும் - அது
தருமொரு வாழ்வென தலைநிமிர் சொல்லு
அருந்தமிழ் சிதைந்திட அன்னை - அவள்
ஆருயிர் காப்பவர் யார் எமைவிட்டு....!

************************

1 comment:

  1. உற்சாகமூட்டும் வீரமிகு வரிகள்... அருமை...

    சிறப்புக் கவிதைக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete