Wednesday, November 21, 2012

அழகுக்கு அழகு !

வான் நிலவென்றால் முழுமதியழகு
வரும் மழைகாட்டும் வானவில்லழகு
தேன்மலர் பூத்தால் தினம்தினம் அழகு
திரிந்திடும் தென்றல் தொடுமுணர்வழகு

மான்களும் ஓடி மருளுவ தழகு
மனமதில் காணும் மாற்றங்க ளழகு
வான்முகில் திரளும் வடிவங்கள் அழகு
வரும் இடராகின் துணிவதும் அழகு

மின்னலில் தோன்றும் மென்பயம்அழகு
மேகத்தின் இடியில் தாய்மடி அழகு
புன்னகை பெண்ணில் பொலிந்திட அழகு
பூத்தொடு மாலை  பூசையில் அழகு

பொன்முடிவேந்தன் புகழ்பெரி தழகு
புத்தொளி ஞானம் புலமைக்கு அழகு
நன்னெடு மரங்கள் நயமுறும் சோலை
இல்லையென்றீதல் இருப்போர்க் கழகு

வன்செயல் நீத்தல்  வாழ்வினில் அழகு
வறுமையைப் போக்கல் ஆள்பவர்க் கழகு
துன்பங்கள்  வாழ்வில் தொலைந்திட அழகு
தூய மனங்கள் சேர்வதும் அழகு

எண்ணங்கள் கொள்ளும் கற்பனை அழகு
இளமையில் காதற் பிரமையு மழகு
மண்ணிடை தவறை மன்னிப்ப தழகு
மனையவள் பணிந்து மகிழ்வது மழகு

புன்மையி லூறிய பொய்யனும் அரசைப்
பேயெனும் ஆட்சி பிழைசெயு மன்னன்
பெண்வதை, மண்ணில் பெருபலியிடுவோன்
புவியிடை அழிவது அழகிலும் அழகே

1 comment:

  1. விரைவில் வந்து கவி பாடுங்கள்...

    இணைப்புகளுக்கு நன்றி...

    ReplyDelete