Tuesday, October 23, 2012

முத்தேவியர்க்கும்...!


வீணை கரமெடுத்து வெள்ளைமலர் இருந்து
வேண்டும் கலைகள் தரும் வாணியம்மா -நல்ல
ஆணை பிறக்கவென அன்பிலுனை யழைத்தோம்
ஆகும் வரமெமக்கு தாருமம்மா - புவி
காணும் உயிர்களுக்கு கல்வி உயர்வுதந்து
காக்கும் குணம்மிகவே செய்யுமம்மா -இனி
வீணிற் கலகம் செய்து வீம்பில் உடலழித்து
வெள்ளை மணல் சிவக்க வேண்டாமம்மா

ஞாலம் முழுதும் பொன்னை நாடிச் சொரிந்து ஒரு
நாளில் உயர்வு பெறசெய்யு மம்மா -இன்று
காலம் முழுதும் சிலர் காவல் அதற்கிருக்கக்
கந்தை யுடுத்தவரும் காண்பதென்ன - ஒரு
கோலம் இதுவுமென்ன கொண்டோர் உயரிருந்து
கொட்டும்குவை நதியென் றோடிப் பெருங் - கடல்
போலும் வறுமைகொண்டு பிள்ளை பசியிலழும்
பள்ளம் நிரம்ப வழி காட்டுமம்மா

வாளைக் கரம்பிடித்து வந்தோர் வலியரெனில்
வீரம்,அறம் இணைய வேண்டுமம்மா - வெறும்
கோழை மனத்தினொடு கொள்கை சிறந்திருக்கக்
குற்றம் கொடுமை தீரம் கொள்வதுண்டோ - கருந்
தேளை அரவமென்னில் தீண்டும் விடம் கொடுத்து
தப்பும் முயல்களுக்கு கால் படைத்தாய் - இனி
நாளை உலகமதில் நல்லோர் துணிந்துஎழ
நாசம் விளைப்ப ரச்சம் கொள்ள வைப்பாய்

குற்றம் புரிந்தவர்கள் கோலைப் பிடிப்பதெல்லாம்
முற்றும் தடுங்கள், மூன்று தேவியரே - நன்கு
கற்றுத் தெளிந்தவர்கள் காட்டும்வழி நடப்பர்
பெற்றும் வெற்றி முடி சூடவேண்டும் - இனிப்
பற்றும் உயிர்களிடை பாசம் உடையவனே
கொற்றம், குடைவிரித்துக் குந்தவேண்டும்  இவை
சற்றும்  இழந்தமூடன் முற்றம் நிறைந்தகுவை
பொற்கல், பணம் குவித்தல் நிற்கவேண்டும்

***********************

2 comments:

  1. நீங்கள் சொன்னவை எல்லாம் நடக்க வேண்டும்...

    நல்லதொரு நாளில் சிறப்பான பகிர்வு... நன்றி...

    விழாக்கால வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்...

    உலகம் நல்லதொரு சுழலுக்கு மாறட்டும்... உங்களின் வரிகளில் உள்ளது போல... அருமை

    ReplyDelete