Thursday, December 13, 2012

முடியாத தொடர்



நிலைமாறி ஒருநாளும் எதிர்காலம் பின்னாலே
நிகழ்காலம் வருவதில்லை
தலைமாறி எழுஞ்சூர்யன் தடுமாறி மேற்கென்ற
தானுதய மாவதில்லை
வலைமாறி நீர்பற்றி மீன்நழுவி ஓடவிடும்
வழமைக்கு ஆவதில்லை
தலைசீவி கொலையாக்கும் தரம்கெட்ட மனிதகுலம்
தவறியும் திருந்தவில்லை

இலை மாறி அழகோடு இதழ்கொண்டு வாசமெழ
இனிதேனை சுரப்பதில்லை
கலைமாறிக் கவின்பாடும கனிபோலும் செந்தமிழின்
காண்சுவை கசப்பதில்லை
அலைமாறி கரைதோன்றி ஆழநடு கடல்நோக்கி
அசைந்தோடி அழிவதில்லை
புலைகீறிக் கொல்லென்ற பொதுவானகொள்கைதனை
பகைவர்கை விட்டதில்லை

சிலைமாறி உயிர்கொண்டு சிற்பிகை உளிநொந்து
செயல்கொண்டு அழுவதில்லை
மலைமீது வருங்காற்று மலர்வாசம் கொண்டோடி
மூச்சாக மறுப்பதில்லை
விலை என்று கருவாடு விளைபொன்னின் அருகோடு
விற்கச்சம மாவதில்லை
தலை கொண்டு உயிர்வாங்க தமிழ்கொன்று மகிழ்வாக
தயக்கமோ தீயர்க்கில்லை

பலம்கொண்டு தமிழ்வாழ பலநாடும் எதிர்வந்த
பரிதாபம் நேர்மையில்லை
நலம்கொண்டு உயிர்காக்க நாளன்று கொண்டநிலை
நானிலம் புரிந்ததில்லை
புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் புறமென்று தமிழ்தன்னை
பிரிந்தின்று வாழ்வுமில்லை
நிலமென்ப தொருநாளில் நிம்மதியைக் காணும்வரை
நித்திரை முழுமையில்லை

No comments:

Post a Comment