Tuesday, December 4, 2012

வாழ வழி காண்போம்

தித்திக்கும் தித்திக்கும்  தீந்தமிழ் சந்தங்கள்
சித்தத்தி லூறிடத் தித்திக்குமே
எத்திக்கு மேகினும் இன்பத் தமிழ்ஒலி
சத்தத்தி லுள்ளம் மகிழ்ந்திடுமே
புத்திக்கும் சந்தங்கள் போதைதருமுடல்
ரத்தத்தில் புத்துணர் வூட்டிடவும்
கத்திக் கும்மாளமிட் டேமனமெங்கணும்
காற்றென வானிற் பறந்திடுமே

விக்கித்து விக்கித்து வீணாக வாழ்வினில்
வேதனை கண்டுமனம் சினந்து
பக்கத்தில்காணுநற் பாதை விடுத்துள்ளப்
பார்வை கெட்டுக்குரு டாதலின்றி
துக்கித்து துக்கித்து துன்மென்றாகிடத்
தோல்வி யென்றே மனம் தேய்தல்விட்டு
சுத்திக்கும் அன்பெனும் சொல்லை மனத்தெடு
சேர்ந்திடு வோம்நல் மனங்களொடு

நற்கதி லோகங்கள் நட்டநடுவெளி
நாட்டிய மாட்டிக் களிப்பவளும்
கற்பிக்கும் போதனை காலத்தின் கட்டளை
காத்து மதிகொண்டு வாழ்ந்திடுவோம்
சிற்பமெனப் பொழிந் தற்ற உணர்வுகள்
சொற்ப மகிழ்விற் படைத்திடினும்
அற்ப பிறவியின் ஆழம் வரைகண்டு
ஆற்றல் புரிந்ததை காத்திடுவோம்

நர்த்திக்கும் நாதன் நடனம்விரும்புவோன்
நாடியெம் தீமை யழித்திடுவோம்
வற்றும் குளத்திடை வாழும் மீனாகிய
வாட்டம் போகமழை வேண்டிடுவோம்
முட்புதர் தோன்றியெம் முன்னேசெல்லும்வழி
மூடிபரந்திட்ட போதினிலும்
நற்புரிவோடுயர் ஞான மளித்தனள்
நம்முளத்தீ கொண்டெரித்திடுவோம்

சொற்பதம் கொண்டுநல் சுந்தரகீதங்கள்
சொல்லித் தமிழிற் கிறங்கிடுவோம்
நற்பெரு நாத நவரச முத்தமிழ்
நாவிற் பொழிபவள் நாம்தொழுவோம்
முற்று மினித்திடா வாழ்வு உலகத்தில்
மூச்சைஅடக்கிடும் காலம்வரை
அற்புததேவதை அன்புத் தமிழ்சொல்லி
ஆனந்த மிட்டவளைத் தொழுவோம்
*********************

No comments:

Post a Comment