Thursday, October 18, 2012

நவராத்திரி பாடல் 1

வீரத்தின் தேவி வெற்றியின் ஊற்றே
வேண்டுவ தீந்துவிடு
சாரமும் கெட்டுத் தளர்ந்தவருண்டு
சக்தியை ஊற்றிக் கொடு
தூரத்தில் தோன்றும் சூரியன்மீது
சொல்லொணாச் சக்தி வைத்தாய்
பாரத்தைக் கொண்டு பற்றினோம் கையைப்
பணிந்தனம் சக்திகொடு

ஆற்றுக்குவேகம் அனலுக்குதீய்ப்பு
அடித்திடும் புயற் துடிப்பு
சீற்றத்துக் காழி  செழிப்பதில் பூக்கள்
சிறப்பென நீ படைத்தாய்
வீற்றிருக்குமுன் வெள்ளிமலைபோல் 
வீறுடன் நாம் நிமிர
போற்றுகின்றோமெம் புன்மையழித்துப்
பூமியில் மாற்றவிடு

சேற்றுக்குள் பூத்தால் செந்தாமரைப்பூ
சீ யென்று தள்ளுவதோ
காற்றுக்கு எம்மேல் கடுஞ்சினமேவி
கணமேனும் நின்றிடுமோ
மாற்றுக்கு ஏதும் வழியில்லையோ எம்
மனதுக்கு மகிழ் வெல்லையோ
நூற்றுக்கு ஒன்றாய்  நாம்வாழல்விட்டு
நிலைதனில் கெடுவதுவோ

கொட்டலாம் மேகம் குமுறலாம் ஆழி
கூரைகள் பிய்த்தெறிந்தே
பட்டதைச் சூறை பாதி முறித்தே
பலமென்று காட்டிடலாம்
வெட்டலாம் மின்னல் வீழலாம் தாரை
வெள்ளமாய் நீர் கொட்டலாம்
விட்டெலாம் நீங்கும் விதமிவை வாழ்வில்
வந்திடத் தேறுவமோ

1 comment: