Friday, October 19, 2012

நவராத்திரிபாட ல் 2

        கருணை காட்டு
              
அடிமனதிலெழும் கவலை
.  அதையறிவ துனதுநிலை
.  ஆற்றிவிடு சக்திதேவி
துடித் துளமும் துயருறவும்
.  தொலைவிலிருந் தெமையறிவ
.  திலைஎனவும் மறுப்பதா நீ
விடிவுகொள இவரெமது
.  விளைவிலெழும் புதல்வரென
.  விரும்பி எமக்கன்பை யருளி
முடிவையெடு இருகரமும்
.  முகை மலரென் றிணையவுனை
.  மனமுவந்து கேட்டோம் தேவி

தினம் நடந்த திங்கள்முகம்
.  தனையிழந்து குறுகுதென
.  தமிழ் சுவைத்து வாழ்ந்த இனமும்
தனமிழந்து தரமழிந்து
.  தமிழ் குலைந்து தமையிழந்து
.  தவிக்கும்வகை காண்பாய் சக்தி
மனமழிந்து வாழ்விழந்து
.  மதிபிழன்று மானிடத்தின்
.  மகிமைதனும் இழந்தே தேவி
கனமிழந்து வாடுமெமைக்
.  காப்பதற்கு வேண்டுமுடன்
.  கருணை கொண்டு காண்பாய் சக்தி

நகையிழந்த சிறுவர்முகம்
.  முகையழிந்த மலர்க்கொடியும்
.  சிகையிழந்த பெண்ணின் வடிவாய்
புகையிழந்த தீயுமொரு
.  புனலிழந்த பொய்கையென
.  வகையிழந்த வாழ்வில் இணைந்தோம்
பகையெழுந்த பூமிதனில்
.  பழியெழுந்த விதமெதுவோ
.  குகையொழித்த இருளும்போலே
மிகையழிய மேதினியில்
.  அகமகிழ இருப்பதென்ன
.  தொகையழியு முன்னர் காப்பாய்

1 comment:

  1. அழகான அருமையான பாடல்... வாழ்த்துக்கள்...

    நன்றி...

    ReplyDelete