Saturday, December 8, 2012

இரங்காயோ எம்மில்.!

தெய்வத் திருவுருவே தேனூற்றே உயிர்களிவை
உய்யத் திருவருளும் ஈயாயோ பொன்னடிகள்
கையிற் தொடவிழுந்து காலமெலாம் அழுதிடினும்
எய்யும் ஒருஅம்பாய் எம்மிதயம் துளைப்பதென்ன?


மெய்யைக் கிழித்தங்கு மேனியதன் குருதி யொரு
பெய்யும் பொழிமழையாய் பீறிடவே கொட்ட நிலம்
மையத்திடை படுத்தி மாடுகளை உதைப்பதென
வையத்திடை செய்யும் வதையிருந்து காவாயோ

செய்யாப் பெருங் கொடுமை சேறாக்கி தாழ்வெண்ணி
நையப் புடைத் தெம்மை நாடகன்று ஓடவைக்க
குய்யக் கூவென்றுநாம் குரல் அலறி நீர் சொரிந்தும்
கையைக் கொடுத்தெம்மை காவாது நிற்பதென்ன

அய்ய நின்அரைமேனி அணைந்தவளும் உன்னழகில்
மையலிட் டெம்மை மறந்தனளோ மாதேவி
நெய்யை பெறுவிழிகொள் நீலத்திருமேனி யளே
பொய்யைப் பெருவாழ்வுக் கீந்தெம்மைக் காவாதேன்

தொய்யத் தமிழ் தன்னும் தூயஒளிச் சுடர்மாயக்
கொய்சிரசும் கொல்லென்று குலம்தமிழைக் குபபையிலே
துய்யத் துடித்தலறத் துவம்சம்செய் பகை கண்டும்
வெயில் எழப் புல்நுனியின் வீழ்பனியென் றாக்காதேன்

(வேறு)

வையத்தே ஆயிரம் கோடியெனப் பல
வாழும் இனங்களைச் செய்தவரே
தையத்தை என்று நடமிடவும் தமிழ்த்
தாய் தந்தமேனியைக் கேட்பதென்ன
பொய்யைத்தான் கூறி யினமழிக்கும் அந்தப்
புல்லனும் இரத்த வெறி பிடித்துக்
கையைத்தான் காலை இழுத்துவெட்டிச் சுகம்
காணப் பொறுத்தனை, காத்திடவா!

தெய்வந்தான் காத்திடு மென்பவரையொரு
தேவதை வந்துமே காக்கவில்லை
எய்யத்தான் பூங்கணை கொண்டுமதன்இவர்
மெய்யைத்தான் தீயெழச் செய்வரென
அய்யோதான் என்றே அழுதவளும் அவன்
ஆவிபிரித்திட ஆளனுப்பி
மெய்யைத்தான் தீயெழச் செய்வதென்ன இனி
மீளத்தான் எம்மைநீ காப்பதெப்போ

No comments:

Post a Comment