Tuesday, December 4, 2012

ஒருதலை ராகம் (நகைச்சுவையாக..)



செந்தேன் கருத்தவிழி சித்திரமோ அற்புதமாய்
சேர்ந்தழகு கொள்ளை கொள்ளுதே
வெந்தேனோ என்மனதுள் விண்ணதிரப் புவிசுழல
வெள்ளிமலை தீவெடிப்பதேன்
வந்தாளோ வஞ்சியிவள் வாசமெழப் பூமுடித்து
வானமகள்  ரம்பை மேனகை
சொந்தமென் றானவளோ சுந்தரியோ கண்டுளமும்
சின்னதாகப் பூவிரிப்பதேன்

அந்தோ நிலாவொளியில் ஆளவென வந்தவளோ
அல்லியெனக் காணுகின்றவள்
சிந்தோமெனச் சிறிதோர் புன்னகையை பூட்டிவைத்து
சிந்தை கொளக் கண்டுபோற்றினேன்
நந்த வனத்தினிடை நான் பறித்த பூக்களெலாம்
நாட்பொழுதில் வாடுகின்றதே
இந்தா இவள்மலர்ந்த புன்னகையோ என்மனத்தில்
இல்லை வாட்டமென்று காண்பதேன்

என்தேன் இளம்மனத்தில் இன்னிசைக்கும் ராகமெலாம்,
எப்படிதான் வந்துசேர்ந்ததோ
சந்தேன் வளைமதியும் சந்தமெழும் பாதநடை
சஞ்சலத்தைத் தந்திருப்பதேன்
மந்தி மரக்கிளையின் முன்னேறித் தாவுதென
மாவிலங்கு போலவந்தனன்
அந்தோ விழித்திருக்க ஆரணங்கைச் சேருகிறான்
அதிசயித்து விழிசிவக்கிறேன்

மந்த மனம்மயங்கி மாதவளோர் புன்னகையை
மதிபிழன்று அள்ளிவீசிட
வந்தோனவ் விண்ணிலெழும் வானமகள் தேவதையின்
வண்ணக்கரம் பற்றி நிற்கிறான்
என்தேகம் சூடெழவும் இப்படியும் விட்டிடவோ
என்மனதின் ராஜகுமாரி
முந்திநடை நடந்து மோகினியை முன்மறித்து
மோசமிது என்செயலென்றேன்

வந்தீர் என்னோடுபிற வாயினுமென்  சோதரனே
வாழ்விலெனைக் காத்திட வந்தீர்
பந்திஉணவுமிட்டு பார்த்திருக்க ஊரவர்முன்
பாவையிவள் தோளிணைவார் காண்
தந்தை நின்சொல் மதிப்பார் தாமிதனைகூறியெமை
தானிணையத் தா வரமென்றாள்
அந்தோ அதைவிடவோர் ஆனந்தமென் வாழ்விலுண்டோ
அகமிருந்த மெய்யிழந்தேன் நான்

No comments:

Post a Comment