Friday, September 21, 2012

உள்ளம் கொள்ளை கொண்டது !


மென்மலர்கள்  தூங்கும்போது மின்னல்வெட்டுது - மழை
மேகம்வந்து சோவெனவே தூறிக்கொட்டுது
புன்னகையில் காணும்மனம் பொங்கி முட்டுது -ஆழி
போகும் ஆறுபோலப் பொங்கி மண்ணைத் தொட்டது
என்நினைவில் என்னவந்து மெல்லத் தட்டுது - எண்ணம்
எத்தனையோ காலம்பின்னென் றென்னைத் தள்ளுது
அன்னைகையில் தூங்கியெழும் ஆசைபொங்குது - அவள்
அள்ளி யென்னைக் கட்டிக்கொஞ்சும் பாசம் வேண்டுது

இன்னி சைக்கும் தெய்வ ராகம் இச்சைகூட்டுது - கோவில்
ஏற்றும் தீபத்தோடு காட்சி  உள்ளே தோன்றுது
சின்னக்குருவி குஞ்சின் கொஞ்சல் கிளையில் கேட்குது - அன்று
சேர்ந்துநின்ற கோழி, குஞ்சின் மென்மை எண்ணுது
பின்னி வைத்தகூந்தல் வண்ணம் மேகம் பூசுது - போகப்
பின்னிருந்து மின்னித்தார கைகண் காட்டுது
அன்னம்  ஓடைநீரில் நீந்த லாகவெண்ணிலா - காண
அன்னை கையில் தந்த அன்ன கவளம் தோன்றுது

தென்னை பின் னிருந்து திங்கள் தேய்ந்து காயுது - அது
தென்றலுக்குக் கண்சிமிட்டித் தேனை வார்க்குது
முன்னிருந்த கோலமென்னைக் கண்டதாமது - இன்று
மேனியெங்கும் ஞாபகத்தை ஊற்றிவேகுது
வன்மையென்று வாசல்வந்த வாழ்வின் எல்லையும் - அன்று
வானிருந்து கண்டவெண்ணி லாவின் கண்ணிது
என்ன வாழ்வு இன்பமோ என்றென்னைக் கேட்குது - என்றும்
இல்லமில்லமாக வந்து  எட்டிப் பார்த்தது


சில்லென்றூதி ஓடுமிளங் காற்றில் சேர்ந்ததாய் - விதி
செல்லென் றென்னை தள்ளிச் சேற்றில் வீழ்த்த நின்றது
இல்லையென்று போனதென்ன ஏனோ என்குது - வாழ்வில்
இருந்திருக்க வேண்டுமென்று  தீயை மூட்டுது
கல்லெடுத்து என்திசைக்குக் காற்றில் போட்டது - அது
காலடியில் பூக்களாக்கிக் காலம் வென்றது
நல்லதென்று கொள்ளும் வாழ்வில் நாலும்செய்தது - அங்கு
நன்மை யென்று சக்திரூப  நாதம் கேட்குது


சின்னப்பூக்கள் கண்மலர்ந்து நின்றதோஅங்கு. - காலை
செம்மைவானச் சுடர் எழுந்த போதுளம் கொண்டு
என்நினைந்தோ வெய்யில் தன்னை வேண்டிநின்றது - சூடு
என்பதென்ன சுட்டபோது வாடி நின்றது
அந்திநேரமாகித் தென்றல் ஆடிவந்தது - நின்று
ஆடும்பூவின் வாசம்தன்னை யள்ளிச் சென்றது
செந்தணலென் றானவானம் சில்லென்றானது - கதிர்
சின்னப்பூக்கள் மீதுமஞ்சள் வண்ணம் போர்த்தது

1 comment:

  1. அழகான கவிதை...

    எங்கள் உள்ளம் கொள்ளை கொண்டது...

    வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete