Thursday, September 20, 2012

சுதந்திரம்


காற்றுவானில் ஓடி ஓடிக் கண்டதே சுதந்திரம்
ஊற்றும் மேகம் ஓடும்வானில் உள்ளதே சுதந்திரம்
ஏற்றமுற்ற ஆற்றுநீரும் ஓடும் கீழ் சுதந்திரம்
இற்றை நாளில் ஏழைகொள்ள இல்லையே சுதந்திரம்

ஆற்றில் நீந்தும் மீன்கள் துள்ளும் ஆனந்தம் சுதந்திரம்
காற்றின் போக்கில் சுற்றும்பட்டம் காண்பதும் சுதந்திரம்
ஊற்றும் மேகநீர் கலக்கும் ஒங்கும் சாகரத்தலை
ஏற்றங் கண்டு வீழ்ந்தும் ஓடி இன்பங்கொள் சுதந்திரம்

காட்டில் பூத்த தேன்மலர்கொள் கள்ளையுண்ட வண்டதும்
தோட்ட மா மரத்தில் தொங்கும் தேன்பழத்தை தின்றதும்
கூட்டி வான்பறக்கும் சின்னக் குருவி காண் சுதந்திரம்
நாட்டில் வாழும் நம்மவர்க்கு நல்கவில்லை ஏனின்னும்

பாட்டி சொன்ன பைந்தமிழ்க்கு  பாடிஆடும் நாட்டியம்
காட்டி அன்புக் கோட்டையென்று காவல்கொண்ட சொந்தமும்
தேட்டமிட்டுச் சேர்த்தபொன்னும் சொத்தும் கொள்ளை போய்விட
வீட்டின் பின்புறத்தில் ஓடிவீழ்வதோ சுதந்திரம்

தோட்ட மீது நீரிறைத்து துள்ளியோடிக் கத்தரி
நீட்டு வாழையோடு வெண்டி நீத்து பூசணிக்கென
பாட்டுபாடி காவல்காத்துப் பட்சியோட்டி வானிலே
கேட்டொலிக்க அச்சமின்றிக் காணுதல் சுதந்திரம்

சூட்டில் தேகம் விட்டொழிந்து சோர்வதோ சுதந்திரம்
பூட்டிவைத்து போட்டடிக்க ஆவதோ சுதந்திரம்
வாட்டிபெண்கள் வாய்கிழிக்க வாழ்வதோ சுதந்திரம்
ஓட்டியெம்மை பூமி மேய்க்க உள்ளதோ சுதந்திரம்

No comments:

Post a Comment