Wednesday, October 3, 2012

வாழப் பழகிவிடு


நீரின்றி வெம்மையில் காயும்பஞ்சு அந்த
நீலவான் மேல்மிதந் தோடிவரும்
நேரின்றி எண்ணிடும் எந்தநெஞ்சும் என்றும்
நிம்மதி குன்றிட வாடி நிற்கும்
வேரின்றிப் பட்டிட எஞ்சும் மரம் வெட்டி
வீழ்த்துவதாய் மண்ணில் வீழ்ந்துவிடும்
யாரின்றி நீகொள்ளும் இந்த துயர் கண்ணில்
ஆறென நீர் வழிந்தோட வைக்கும்

தேரின்றிக் கோவிலில் நிற்கும் தெய்வம் என்ன
செய்யினும் பேரெழில் கொண்டிடுமோ
கூரின்றிக் வீரனும் கொண்ட வாளால்அவன்
கீர்த்தியுடன் வெற்றி மாளுமன்றோ
பாரின்று வாடிடும் உந்தனுள்ளம் வாழ்க்கைப்
பாதையில் கல்லுகள் காணுவதோ
கூர்எழில் கொண்டிட வேண்டின் வாழ்வில் சில
குற்றங்கள் மன்னித்தல் வேண்டுமன்றோ

மஞ்சள் நிலவோடும் நீல விண்ணும் ஒரு
மா மலை மீதுறை வெண்முகிலும்
கொஞ்சுங் கிளிகளின் ஆரவாரம்  வாசக்
கொத்து மலர்களின் கொள்ளையெழில்
அஞ்சும் சிறு பிள்ளை போல்வெகுளும்  அந்த
ஆற்றங்கரை மான்களின் கூட்டமெல்லாம்
கெஞ்சு மிருவிழி கொள்வதென்ன ஆகா
கோடிகோடி இன்பம் கொள் சுகமே!

தீரம்கொண்டே நீ எழுந்திடடா மனம்
தேறு உறுதியைக் கொண்டிடடா
ஓரம் நடந்திடல் விட்டுக் கண்ணே நீயும்
உண்மை தனை எதிர் கொண்டிடடா
பாரம் இறக்கிவை உள்ளம் இரு நீண்ட
பட்டுச் சிறகுகள் கொண்டதென்றே
தூரம் பறந்திடு துள்ளி யெழு வானில்
துன்பம் மறந்தின்பம் கொண்டுநில்லாய்

சொல்லும் பலகதை சுற்றும் பூமி அது
சொர்க்கம் தடுத்திடும் முள்ளுவேலி
கல்லும் பெருவிஷ தேளரவம்   எங்கும்
காணும் வாழ்வு செல்லும் வீதிவழி
வல்ல மனமெனில் வாழ்ந்துகொள்ளும் இள
வஞ்சியே எண்ணு எந்நாளும் இதை
சொல்லமுடிந்தது யானும் இந்தப் புவி
சொந்தமிலை வாழ்வு செல்லும்வரை

No comments:

Post a Comment