Saturday, September 15, 2012

ஞாபகங்கள்

சுனையொன்றில் கயல்துள்ளி சுழன்றுவீழும்
சிறு அலையில் வீழ்ந்தஇலை சேர்ந்துபோகும்
பனைவிம்பம் நீரலையில் பாம்பென்றாடும்
படர்காற்றும் பனிக்கூதல் பெற்றுவீசும்
வனைந்தகழி மண்பானை வரிசைகாணும்
வந்திருந்து குருவியிசை வாழ்த்துப்பாடும்
நனைந்த மழைக்கிலவமரம் நின்றபஞ்சும்
நடுவானில் உலர்ந்தபின் எழுந்துபோகும்

மனையிருந்து பெண்ணின்குரல் மகனைத்தேட
மடியிருந்து வளர்ந்தவனும் மறுத்தும் ஓட
சினை முதிர்ந்த பசுஒன்று சினந்து கத்தும்
சின்னதொரு காகம்முது கிருந்து கோதும்
முனை எழுதும் ஏர்கொண்டு முதுகில்வைத்தே
முழுவயலும் உழுமெருது மெல்லச்செல்லும்
புனைந்தெழிலை பூண்டமகள் கஞ்சிவைத்து
புகை மணக்கும் அழகினொடு போகக்காண்பாள்

கனி விழவும் காலுதைக்கும் கழுதையொன்றால்
கடுமணலும் சிதற ஒருகல் லெழுந்து
தனியிருந்த குருவியயல் தவரிவீழ
தலை போனதென்றலறி திமிறியெழுந்து
நிலமகளை முத்தமிட  நெருங்கும் வான
நீலமதில் கூச்சலிட்டு  நெடுக ஓடும்
இனியென்ன செய்வதென இழந்தவாழ்வை
எண்ணியொரு இரந்துண்ணும் உருவம்போகும்


வரியெழுந்த குதிரை யொன்றுவயலில் காணும்
வரும் மழைக்கு முகில் கூடி வானில்நிற்கும்
சரிந்த பனைஒன்றில் குயிலிருந்து பாடும்
சந்தமென நடை போடும்வண்டிமாடும்
எரிந்த உடல் சுடலையொன்று இருந்தமௌனம்
இதனருகே போகுமிளம் பெண்ணின்நெஞ்சம்
விரித்த விழி வேண்டாத விளைவுக் கஞ்சும்
விரைந்த கால் நிறுத்த அயல் குரங்குபாயும்

நரி துரத்தமுயலொன்று நடுவில் ஓடும்
நாகமொன்று வளைந்தோட ஆந்தைகத்தும்
பருந்தொன்று குஞ்சைக் குறி வைத்து வீழும்
பறந்து தாய்க் கோழிபயம் விட்டுத்தாக்கும்
கறந்தபசு கன்றினுக்கு கிடந்தபாலைக்
கொள்ளென்று கூட்டிமனம் கசந்து கத்தும்
மறந்த தமிழ்ப்பாடல்தனை மனனம் செய்யும்
மரத்தடியில் மாணவனு மருகில் குருவும்

துணிவிழந்து பயந்துமொரு துரத்தும் நாயும்
தொல்லையிது என்றோடும் தனித்தமாடும்
பணிவிழந்து பெற்றவனைப் பழித்த மகனும்
பக்கத்தி லறிவுரைகள் பகரும் பெண்ணும்
மணியொலிக்க வேதஒலி மந்திரங்கள்
மாசற்ற இறை கூட்டும் மனிதர் வேண்டல்
புனித ஒளி புண்ணியங்கள் பொலிந்துவாழும்
பொறிகளென எழும் நினைவு புதுமை யன்றொ

No comments:

Post a Comment