Wednesday, November 21, 2012

நீ வாராயோ?




          நீ வாராயோ


விண்ணெழில் மதி வான்வருகுது
--வீசுங் காற்றதும் வாசங் கொள்ளுது
--வண்ண மென்முகம் வாடிக் காணுது ஏன்தானோ
கண்ணிரண்டினில் நீர்வருகுது
--காவ லெண்ணிடத் தீ எழுகுது
--காட்சி கொண்டெனைக்  கனவு கொல்லுது ஏன்தானோ
எண்ணம் துஞ்சிடத் துயரெழுகுது
--ஏழை நெஞ்சினில் தீபரவுது
--என்னவளென  நீஅழைத்ததும் நான்தானோ
பெண்மை அஞ்சிடத் தலைகுனியுது
--பேச்சிழந்திட ஊர் சிரிக்குது
--பேதை என்றிவள் ஏளனமிடப் பேசாயோ

கால் நடந்திடச் சோர்வுகொள்ளுது
--காற்று வந்துடல் சேர்த்துத் தள்ளுது
--காணும் நெஞ்சிடை ஏக்கம் கொள்ளுது வாராயோ
வேல்க ளென்றிடும் விழி ஒழுகுது
--விம்மிஎந்தனின் குரல்நடுங்குது
--விடிகிற அடிவான் சிவப்பது போல்நானோ
நால்குணத்தினில் நாணம்கெட்டது
--நாஇனித்திடும் தேவைவிட்டது
--நல்லிசைக்குமென் நாட்டம் கெட்டது நான்யாரோ
பால்நிலவினில் பார்குளிருது
--பாய்ந்தலைகடல் வேகம் கொள்ளுது
--பாவை நெஞ்சினைப் பார்த்திரங்கிடல் ஆகாதோ

காக்கை குருவி சேர்ந்து கத்துது
--காளை மாடுகள் தேடிமுட்டுது
--காட்டுத்தோப்பினில் ஆந்தைகத்துது  ஏன் தானோ
பூக்கள் மொக்கினை மெல்லவிழ்க்குது
--போயிதழ்களைக் காற்றுத் தொட்டது
--பார்க்க நெஞ்சினில் வேர்த்துக் கொட்டுது பாராயோ
வாக்குத் தந்ததை நீமறக்கவும்
--வாரிகொட்டிமண் நான்கிடக்கவும்
--வாழ்க்கை என்பது ஆகிவிட்டது வீண்தானே
தீக்கு மென்னுடல் சூடுபட்டது
--தென்றல்தொட்டதில் நோவும்கொண்டது
--திங்கள் போலுடல் தேய்ந்து கெட்டது கேளாயோ

ஊர் நகைத்திட ஓரம் நிற்பதும்
--ஊமைப் பெண்ணென வார்த்தை விட்டதும்
--ஓடித் துள்ளிடும் பாவம்கெட்டதும் உன்னாலே
ஊற்று நீரணி கீழ்க்குளிக்கவும்
--உண்மை கண்டிளம் பெண்கள் வந்ததும்
--ஓடிஎன்மன எண்ணம் கண்டவர் ஒன்றாகி
வேர் பரந்திடும் ஆல் மரமென
--வேகம்பெற்றயல் ஊர் பசப்பிட
--வேடன் விட்டம்பு  தைத்தபுள்ளென வீழ்வேனோ
கார்முகிலுக்குத் தோகை என்றிடக்
--களிநடமிடும் உன் நினைவினில்
--காலிடை கொண்ட பாம்பென நான் சாவேனோ?

No comments:

Post a Comment