Thursday, July 19, 2012

அன்பின் வலிமை

அன்புடை மனதை நீங்கின்
ஆங்கதன் பெய ரன்பல்ல
தன்னலங் கொண்ட வண்ணம்
தாழ்வதும் அன்பென்றல்ல
துன்புறச் செய்யும் போதும்
தோல்வியில் உழன்றகாலும்
வன்மையில் உள்ளம் வெந்தும்
வாழ்ந்திடல் உண்மை யன்பாம்

என்புடை உடலின் சூடும்
இழந்திட வாழ்வு மாயும்
அன்புடை எண்ணம் குன்றின்
ஆற்றலும் தேயும் நல்லோர்
பொன்னது தீயில் வெந்தும்
புத்தெழில் கொள்ளல் போலும்
தன்னக அன்பு துன்பம்
தாங்கிடப் பொலியுமன்றோ

சின்னதோர் பொறிபறந்தே
சென்றது பஞ்சுமூட்டை
தன்னிடை வீழ்ந்ததாயின்
தீயெழுந் தாட்சிகொள்ளும்
மென்னுளம் கொண்ட அன்பில்
மீறிடும் கோபம் இன்னும்
அன்புகண் டகந்தைநீறாய்
ஆகத்தெய் வீகந் தோன்றும்

உன்னத அன்பின் வீச்சில்
உணர்வெழுந் தோடிநன்மை
பன்னெடும் வகையில்கிட்டப்
பனியிதழ் பூவின் நாற்றம்
என்பதோர் இன்பஞ் சேர
இதயமோ துள்ளும்அன்பில்
பின்னியே பிணைந்தவாழ்வு
பிறவியில் பெருமைசேர்க்கும்

கண்சினந் தழல் தகிப்பின்
காதலில் குளுமைஎண்ணம்
புண்ணென ஆகுமுள்ளம்
பெய்மழை தணலைஒக்கும்
விண்ணென விரியுமன்பு
வேகமாய் பற்றி மார்பில்
தண்மைகொள் சந்தனத்தை
தந்ததென் றாக்கிநிற்கும்

உண்ணவே பசி ஒறுப்பின்
ஊரதின் கண்கள் பட்டுப்
புண்ணென ஆனதென்று
புலம்பிடும் அன்னைபோலும்
பண்படும் தன்னில்குற்றம்
பார்த்திடும்  பொய்த்தபோதும்
உண்டெனத் தேற்றும் மன்பு
ஓங்கிடும் தோற்பதில்லை


புன்னகை இதழ்கள்மீது
போவதும் உள்ளம்பொங்கிப்
பன்னெடும் பாதையோடிப்
பாய்ந்திடும் ஆறுபோலும்
தன்னெழில் உவகைமீறத்
தானிணைந் தொன்றுசேர
அன்புடைமனதைத் தேடும்
அதிலிணைந் தொன்று ஆகும்
**************************

2 comments:

  1. அன்பே அனைத்தும் எனச் சொல்லும் அன்பான வரிகள்...
    பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்! மிகப் பூரிப்ப்டைகிறேன்

    ReplyDelete