Monday, July 9, 2012

பாப்பா ஓடிவா !



சின்னப்பாப்பா ஓடிவா! சித்திரமே ஆடிவா
கன்னம்மீது  நீரோடக் காரணந்தான் ஏனம்மா
புன்னகைத்த கண்களும் பூவிரியும் பொன்முகம்
இன்னும்சோகம் கொள்ளுதே ஏனழுதாய் சொல்லம்மா

அத்தை உன்னைப் போடிஎன் றாத்திரத்தில் வைதாரோ
சத்தமின்றிக் குட்டியும் சஞ்சலத்தைத் தந்தாரோ
நித்தம் போலுன் அண்ணனும்  நின்னைக் கேலி செய்தாரோ
எத்தகையோர் காயத்தை உந்தன்உள்ளம் கொண்டதோ

கத்திச் சத்தம் போட்டதால் கையில் கிள்ளிஅம்மாவும்
பொத்துவாயை என்றேதான் புன்னகைத்துச் சொன்னாரோ
நித்திரைதான் வந்ததோ நேரம் ஓடிப்போனதோ
புத்தியின்றி உற்றவர் பூவை காணா நின்றாரோ

நெற்றிமீது முத்துக்கள் நேர்ந்த தென்னகாரணம்
சுற்றி ஓடி வந்ததால் சூரியனும் சுட்டதோ
பற்றுக்கொண்டேன் அப்பாவும் பக்கம்வந்தார் நீரினை
அற்ற விழி கொண்டொரு அன்பு வார்த்தை பேசிடு

 அம்மா பெற்றசெல்லமே ஆடிவரும் பொன்னிலா
 வெம்பி அழும் வேதனை வேண்டாமடி விட்டுடு
 தம்பியுடன் தோட்டத்தில் தாவும்முயல் குட்டிகள்
 தும்பி பூச்சி ஒணானும் துள்ளும்பூனை பார்போம்வா

*****************************

No comments:

Post a Comment