Monday, July 2, 2012

தமிழ் வாழ்த்து

சிங்கார வண்ணத் திகழமுதே  எங்கள்
 சிந்தை தனுக்கின்பம் தாரமுதே
சங்காய் மிளிர் வெண்மைத் தூய்மையதே- நினைச்
 சார்ந்தோர் கவித்துவம் மேலெழவே
எங்கும் கவிமணம் வாசமெழ - வந்த
 எங்களின் இன்பத் தமிழ் அமுதே
தொங்கும் மணிச்சுடர் தீபமென்றாய் நீயும்
  திக்கெங்கும் பொன்னொளி காட்டிநிற்க

மங்காப் புகழ் உனை மாவுலகில் - என்றும்
 மாறாக் கதிரென ஆக்கிவைக்கும்
செங்காய் பழுத்துக் கனிவதன்ன - கவி
  சொல்வார் மனங்கள் கனிந்திருக்க
தங்காய் என்றும்நல்ல பாவலர்கள் - நின
  தாக்கிப் பெரும் மணி மாகவிஞர்
பொங்காய் எனப் பல பாப் புனைந்து - என்றும்
 பாலொடுதேனினி பாகு தர

மங்கை மடிகொண்ட மாதேவனின் -முடி
   மேலிருக்கும் பொன்னை நேர்நிலவை
எங்கே தொடுவே னென்றே உயர்ந்த  - மலை
  என்றே உயர்ந்திட வாழ்த்து கின்றோம்
கங்கை குளித்த குளிரு ணர்வும்   - அலை
   கொண்டே தெளிக்கும் கடல்விரிவும்
தெங்கின் குணத்தொடு கொண்டதாகம்  - தனை
  தீர்க்கும் கவிவண்ணத் தாய் நீயன்றோ

No comments:

Post a Comment