Wednesday, July 11, 2012

திருமண வாழ்த்துக்கள் 2


உயிரோடு உயிர்சேர உறவொன்று காணும்
ஒருவாழ்வின் முதல்நாளிதாம்
பயிர்ஈது ஆயிரங் காலத்துக் கென்றே:
பலர் போற்றும்பெரு வாழ்வுதான்
வெயில் கண்டு மலர்கூட்டம் விரிகின்ற போலும்
விளங்கும்உங் கள்வாழ்க் கையில்
மாயிலாடும் மான்கூட்டம் மகிழ்வாகத் துள்ளும்
மனம் காணும் மகிழ்வொன்றுதான்

எழில்கொண்ட வாழ்விலே இணைகின்ற கைகள்
இறுகட்டும் பிடி அன்பினால்
வழிகண்டு நடைகொள்ளூம் புதுவாழ்வில் எங்கும்
வசந்தமே வீசட்டும் மேல்
வெளிவானில் முகிலோடும் விளையாடுந் தென்றல்
வீசட்டும் அதுவீட்டில், வான்
ஒளிதந்து கதிரவன் எழுகின்ற விடியல்
இதுஎன்றும் புதுவாழ்வுகாண்

ஒருவர் பின் இருவராய் ஒருவாழ்வு கண்டீர்
இருவரும் ஒன்று சேர்ந்தீர்
இருவரும் பின்னொன்று மூவரென்றாகி
இன்பமும் கொண்டு வாழ்வீர்
தருமன்பு குறையாது தரணியில் பொங்கித்
தழைக்தோங்கும் வாழ்வினூடே
பெருகட்டும்சந்ததி பெருமைகள் சேர்த்தே
பிறந்திடும் அன்பு வாழ்வு

எதுவந்த போதிலும் ஒருவரோ டொருவர்
உளளத்தில் கள்ளமின்றி
புது வாழ்வின் இந்நாளைப் போலவேயென்றும்
புன்னகை கொண்டு வாழ்வீர்
விதிவந்து விளையாடும் மனமொன்றி நின்றால்
வென்றிடத் துயரோ டிடும்
பதியோடு சதிசெய்யும் உறவுகள் ஓங்கி
பலநூறு ஆண்டு வாழ்க!

No comments:

Post a Comment