Wednesday, January 16, 2013

இயற்கையி லுள்ளம்

எழில் கொஞ்சும் இசையொன்று  எழுகின்றதே
இதுகாவின் குயில் பாடுமொலி யல்லவே
பொழிலாடும் அலையென்றே உணர்வாகுதே
புரியாத மழையொன்று பொழிகின்றதோ
தழலான உளவெம்மை தணிகின்றதே
தரைமீது நிலவொன்று தவழ்கின்றதோ
அழகோபொன் னொளியாஅல் லதுதாரகை
அதுமின்னும்  இய்ல்பாக மனம்கொள்வதேன்

நெளிந்தாடும் அலைகொண்ட நீரோட்டமோ
நிகழ்வான வில்லொன்றின் நிறமூட்டமோ
குளித்தாடும் மலர்கொண்ட குளிர்தேக்கமோ
குவிந்தாலும் பனிகொண்ட  நிறவெண்மையோ
அளித்தாலும் குறையாத அமுதானதோ
அருஞ்செல்வம் குவிகின்ற திறைசேரியோ.
தெளிந்தோடு முகிலற்ற பகல் வானமோ
தினம் தேய்ந்து வளர்திங்கள் முழுதானதோ

ஒளிவானின் வழிதோன்று மொருகாலையில்
உருகாத பனிதன்னும் நிறை காற்றினில்
அழியாத மெருகோடு அருகாமையில்
அழகான மயிலென்று விரிதோகையில்
பொழிகின்ற முகில்கண்டு நடம் கொள்ளுதோ
பொதுவாக  வலம்போகும் தெருவீதியில்
நெளிகின்ற நளினத்தின் அசைகாற்றுமே
நிகழ்வுக்கு இவள் கொண்ட அசைகற்குமே

வலை கொண்ட மீனென்றால் விழிதுஞ்சுமே
வளர்கின்ற பிறை யென்னில் வெகுதூரமே
அலைந்தோடும் நதியென்றால் விழும்பாவமே
அனல் வீசும் ஒளிர்வென்னில் சுடும்நோகுமே
மலைமீது எழும்காற்றின் குளிரானதே
மனம் போதை யுறச்செய்யு தெனில்போர்வையும்
நிலைகொள்ளச் செயும்பாவம் இவனல்லவோ
நெடும்வானில் முகில்மூடும் நிலவல்லவோ

No comments:

Post a Comment