Saturday, January 12, 2013

எங்கே சுதந்திரம்?


காலை புலர்ந்திடக் காட்சி  விரியுது
காணும் புவியொளி ஞானப்பெண்ணே
ஞால முழுதிலும் நன்மை பரந்தின்ப
நாளும் விடியுமோ சொல்லுபெண்ணே
கோலஞ் சிவந்திடக் கீழ்த்திசை வானிடை
கூடிப் பறந்திடும் புள்ளி னங்கள்
கால காலமெனக் கொள்ளும் சுதந்திரம்
கையில் கிடைக்குமோ சின்னப்பெண்ணே

ஆலமர நிழல் ஆடிவருந் தென்றல்
அல்லிசெந் தாமரை நீர்க்குளத்தின்
சீலமொடு மேவு சிற்றலை நீர், கயல்
சேரடிவானத்து வெண்முகில்கள்
நீலவானவெளி நீந்திடும் போததில்
நித்திய இன்ப சுதந்திரத்தை
சாலச் சிறந்துடன் கொள்வது போற்றமிழ்
சற்றும் கொள்ளாதேனோ ஞானப்பெண்ணே

கோலமும் தீயவர் கொள்கை பரந்தது
கூறடி ஏனிது செல்லபெண்ணே
தூலமென்றே துயர் தூரப் பறந்திடத்
தோன்றும் விடிவெங்கே கூறுபெண்ணே
ஆலமென் றாகிய வாழ்வு சிறக்குமோ
அச்சமின்றி உயிர் சின்னபெண்ணே
மூலவிதி கெட்டு வாழும்நிலையற்று
முன்னே சுதந்திரம் கொள்வதெப்போ

வாசலில் வஞ்சகம்வந்து இருப்பதோ
வாழ்வின் கனவுகள் நீரெழுத்தோ
மோசமென்றே நிலை முற்றும் எழுந்தது
மூடு கதவினைச் செல்லபெண்ணே
தேசம் இருளுறத் தெய்வம் மறந்தது                                                                           
தேவையென் னாவது  கூறுபெண்ணே
வாச மெழுமன அன்பினை காவவும்
வீசுந்தென்றல் வரவேண்டும் பெண்ணே

காகங் கரையுது சேதி வருகுது
காணத் திடமெடு சின்னப் பெண்ணே
மேகம் குவிந்திட மின்னலிடியெழும்
மேனி நடுங்கிட ஆக்கும்பெண்ணே
பூகம்பமா யுந்தன் வாழ்வு பொழிந்திடும்
தீமழை காணவும் நெஞ்சு நொந்தே
தேசம் நினைந்துள்ளம் தீயின் விரலிட்ட
தாகப் படும்பாடு சொல்லுபெண்ணே

பூவிதழ் காணவும் பொன்னெனும் காலையில்
‘புத்துணர் வாகிடும் நாள்மலர்ந்தே
நாவில் சுதந்திர கீதமிசைத்திட
நாட்டில் குழுமிய மாந்த ரூடே
கோவில் தெய்வமெழக் கொண்டகுடிமனை
கூடித் திரண்டவர் அச்சம்விட்டே
தாவிக் குழந்தைகள் சத்தமிட அன்புத்
தாய்நில பூமடி கொள்வதெப்போ?

***********

No comments:

Post a Comment