Saturday, January 12, 2013

வேண்டுதல்

தாம்தோம் தத்தோம் தத்தித்தோம்
தாவிடு வானரம் ஒத்திட்டேன்
தீம்தோம் தித்தோம் திக்கெட்டும்
தீமைகளால் மனம் பொய்த்திட்டேன்
பாம்பைப் போலும் கொத்திட்டேன்
பாலதில் நஞ்சும் சொட்டிட்டேன்
வேம்பின் காயை வெட்டித்தான்
விருந்தில் தேனுள் வைத்திட்டேன்

மாயக் கற்பனை கொண்டிட்டேன்
மாலைகள் பிய்த்தும் வீசிட்டேன்
தேயும் நிலவாய் தேய்ந்திட்டேன்
தீயில் விரலைச் சுட்டிட்டேன்
ஆய கலைகள் கற்றிட்டேன்
ஆனால் ஏட்டைத் தீயிட்டேன்
போயோர்  முத்தை சேற்றிட்டேன்
புறமும்பேசிப் பொய்யிட்டேன்

வேண்டும் வரையில் வெட்கித்தேன்
விடியல் அறியா தூங்கிட்டேன்
ஆண்டே இன்பம் தேர்ந்தக்கால்
அழிவே எண்ணிக் காத்திட்டேன்
அன்பில் உன்னை தண்டித்தேன்
அதனா லுள்ளம் சோர்ந்திட்டேன்
வெண்தண் இறையே நொந்திட்டேன்
விளையாடித்தான் வாழ்ந்திட்டேன்

காலைமலரைப் பிய்த்திட்டேன்
கானம் பாடக் கத்திட்டேன்
பாலில் உப்பைக் கொட்டிடேன்
பாமரன் வாக்கைப் பழியிட்டேன்
வேலை இன்றி சுற்றிட்டேன்
வீட்டில் மனைய வைதிட்டேன்
தோலில் கரியைப் பூசிட்டேன்
தெள்ளென் நீரில் தோய்ந்திட்டேன்

இறைவா என்னை மன்னிப்பீர்
இகமும் வாழ்வில் இன்பத்தை
குறையா தருவாய் கொண்டேன்நான்
கோபம் சினமென் றாகாமல்
மறையா துலகின் மன்னிப்பை
மலராம் உதயச் சூரியனாய்
உறையா துள்ளம் உருகித்தா
ஒர்நாள் பொழுதில் மலராதோ

பாவம் நீக்கப் பூசித்தேன்
பரமே சிவனே போற்றிட்டேன்
ஏவல் செய்தேன் இவன்மீது
இறையே சக்தி இரங்காயோ
தூவல்மழையில் நின்றிட்டேன்
தேகம் குளிர ஆடிட்டேன்
ஆவது ஏது அன்புள்ளம்
அணையா தீபம் காப்பாயோ

1 comment: