Saturday, January 12, 2013

தமிழன் வீரம்

  
கடலலையும் ஓங்கியெழும்   காண் தமிழின் வீரம்
குடல்பிசைய வயிறலறும்  கொடும் பகையும் ஓடும்
திடமுடனே தமிழர் எழும்  தீரம்பெரு வானம்
தடையுடைத்துப் பாயப்பகை  தீபடும் பஞ்சாகும்
விடநினைந்து பயமெழுந்து  விரைந்து பகையோடும்
விரும்பிவிடு தலைநடந்தோர் வெற்றிவாகை சூடும்
புடமுமிட்ட தமிழர்மறம்  புனிதமெனக் காணும்
புரட்டும் பழிபொய் புனைந்த பகை யெதிர்த்த தமிழர்

கால்கள் நடை கொள்ளஒலி  கருமுகிலின் உறுமல்
காரிருளில் மின்னல் தரும்  கைசுழல்வாள் கூர்கள்
வீல் எனவேஅழும்குழந்தை  வீறு கொண்டு நிமிரும்
வெள்ளிநிலா முற்றமதில்  வீழ்ந்து நிலம் கொஞ்சும்
பால்குடித்த தமிழ்மழலை  பயமிழந்து தீரம்
பருகியவன் போலெழுந்து  பார்த்தெதையோ உறுமும்
மேல் பறந்த புள்ளினங்கள்  மேதினியில் வீரம்
மேன்மை கொள்ளும் செந்தமிழர்  மண்ணி தென்று பாடும்

வீதியெல்லாம் தோரணங்கள்  வெற்றிதனைக் கூறும்
விடியலிலே வந்தவர்கள்  வேகம்தனைக் காற்றும்
பாதிதனும் தானறியாப்  பண்புதனைப் பாடும்
பனியெழுந்து புகழ்பரந்த  விதம் பரந்து தோற்கும்
மோதிவரும் மேகமெல்லாம்  முகம் கறுத்து  கோணி
மின்னல் இடி விட்டுத் தமிழ்  மண்ணில் மழை தூவும்
சேதி கேட்டுப் பூமரத்தில்  சிறுகுரங்கு தாவி
சிலுசிலுத்த மலருதிர்த்து  செந்தமிழைப் போற்றும்

ஆக இவைகொண்டதெல்லாம்  அறம்மிகுந்த காலம்
அன்னைபூமி நேர்மை திறன்  அகமெடுத்த நேரம்
போக யிவை நஞ்செழுந்து  போட்டவைகள் யாவும்
பச்சைமஞ்சள் செந்நிறத்தில்  பெய்மழைகள் ஆகும்
தேகமதில் தீரமுள்ளோர்   தலையெடுத்த வீரம்
தேவையில்லைக் கோழைகளும்  தீமைசெய்து வெல்லும்
பாகமிது காலமெனப்  பச்சை வண்ணப் பூமி
பார்த்திருக்க செந்நிறத்தில் பாவமழை தூவும்

No comments:

Post a Comment