Wednesday, January 16, 2013

காக்கையரே காக்கையரே


காலையிலே கண்விழிக்கக் காரிருளும் போகமுன்னே
கா..காவெனக் கரையும் கருங் காகமே
சோலையிலே பூமலர்ந்து தூவும்பனி  நீர்வழிந்து
சொல்லு நலம் உள்ளனவோ சேதியென்?
மேலைத்தெரு கோவிலடி மேட்டு வயல்காடுழுது
மாலையி`லே வீடுவந்த மாந்தரும்
ஓலையிலே கூரையென உள்ளசிறு குடிசையிலே
உள்ளனரோ இல்லனரோ கண்டுசொல்

கூவும் வெளிர் சங்கொலியில் கொட்டும்மொரு முரசொலிக்கக்
கொல்ல வந்தபகை நடந்த தறிவையோ
ஏவுகின்ற தொன்றெனவே எத்தர்பகை கூடிவந்து
எல்லை பற்றி நின்றனராம் உண்மையோ
சாவுவரும் மேனிவிழும் சத்திரங்கள் வீடுடையும்
சந்தணப் பொன்மேனி புவி தின்றிடும்
காவுகொண்ட வாழ்விழந்து கண்டவரை போதுமென்றோம்
காணுகின்ற சேதி நெஞ்சு வேகுதே

மாதர்தமைச் சீரழித்து மானபங்கம் செய்தழித்து
மங்கையரின் மேனிதொட்டு ஆடுறார்
மீதமுள்ள பூமியெலாம் மேன்மைகுலச் செந்தமிழர்
மேவியெங்கும் வாழ்ந்தும்ஒன்றும் காணனே
சாதமென்று வேகவைக்க சற்றுநேரம் போகவதில்
சோறு வெந்து அத்தனையும் ஒன்றெனும்
பேதம்கொண்டு பூவுலகில் பெண்ணிழிமை செய்தவரின்
பார்த்த வரை உள்ளம் வேக வில்லையேன்

வாழும் வழி நாமறியோம் வந்துலகில் தோற்றியதென்
வாயழுது  உணர்விழிந்து வாழ்வதா
பாழுமிந்தப் பூமிதனில் பைந்தமிழின் தொன்மையுமென்
பார்த்துயிரைக் காக்க மறந்துள்ளதேன்
ஆள ஒருநாடு விடு அழகியஊர் தேவையில்லை
ஆக மனைகுடிசைதனும் போகட்டும்
சூழுலகில் வாழ்தமிழும் சோதரிகள் இழிமைகொள்ளச்
சோர்ந்துலகில் காணுவதேன் கேட்டுவா

No comments:

Post a Comment