Saturday, January 12, 2013

ஆற்றாமை (தலைவி)



உள்ளம் கலங்குதடி தோழி - மன
ஓசை அழிந்த திந்த நாழி
கள்ளம் ஏதறியேன் மோதல் - தனைக்
காலம் வளர்த்தடி கேள்நீ
வெள்ளம் வரும்பொழுதுமேனோ - அதன்
வேகம் புரியவில்லைத் தோழி
அள்ளும் போதுமதை யறியேன் -விதி
ஆழிகலந்திடவே தெளிந்தேன்


துள்ளும் இளமையடி குற்றம் - என்னை
தேடு துணை எனவே பற்றும்
எள்ளிநகைப்பதென்ன இன்று - அதன்
எண்ணம் அறிவளில்லை என்றும்
கிள்ளிச் சிவக்கும் இருகன்னம் - அதில்
கொட்டும் துளிகள் இதழ்கொள்ளும்
மெல்லச் சுவைக்குதடி உவர்ப்பு - இனி
மேலோ எனதுநிலை தவிப்பு

தள்ளும் நினைவுகளும் சென்றே - எனைத்
தனிமை நிலையில் விடவேண்டும்
வெள்ளி முளைக்கு வரைவிடடி - கதிர்
வேகமெடுத்து வரும் உதயம்
புள்ளின்இனங்க ளெழுமோசை - இளம்
பூக்கள் மலரும் அதிலோடி
கள்ளைச் சுவைக்கும் கருவண்டு - இவை
காணச் சகிக்கவில்லை தோழி

எள்ளி நகைப் பதுண்டோ தோழி - என
தெண்ணம் விளைத்த செயல் மீறி
கொள்ளியெனச் சுடுதே தோழி - இந்தக்
குற்றம் எதுவிலகுக்கும் சொல்நீ
பள்ளிச் சிறுமியென ஆனேன் - வெறும்
பாதி மெலிந்து உடல்நொந்தேன்
அள்ளிகொடுப்பரென வந்தால் - அவர்
அன்பைத் தெரியவில்லைத் தோழி

கள்ளிச் செடியிருக்கு தோழி - அதை
காலம் அளித்த கொடை போநீ
நள்ளி ராவில் வரும் தென்றல் - ஒரு
நஞ்சாய் மனதிழைந்து ஓடி
உள்ளம் அழித்ததடி தோழி - இந்த
உலகில் இருப்பின் இவள்பாவி
வள்ளம் திசை திரும்பி ஓடின் - அதன்
வாழ்வும் நிலைப்பதுண்டோ பார்நீ

*********

No comments:

Post a Comment