Thursday, January 24, 2013

கண்டதும் காணாததும்

ஒன்று சேர்!
(ஒருவன்)
தேனூற்றும் மலர் கண்டேன் திங்கள் கண்டேன்
தினந்தோறும் வாசமிடும் தென்றல் கொண்டேன்
வானேறும் வெயில் கண்டேன் வானில்தூரம்
வளைந்தோடும் பறவைகளின் கூட்டம்கண்டேன்
தானூற்றி வீழ்ந்தருவி தெறிக்கக் கண்டேன்
தரைமீது விளையாடும் மானைக் கண்டேன்
பூநாற்றம் கொண்ட மலர்ச் சோலையெங்கும்
புதுமை யெழில் பொன்நிலவில் மின்னக் கண்டேன்

(இன்னொருவன்)
பன்சிலிர்த்த உணர்வோங்கும் மனங்கள் காணேன்
பனிதூங்கும் குளிர்வண்ணப் பேச்சைக் காணேன்
தென்னைதொடு இளங்காற்றின் சுகத்தைக்காணேன்
தித்திக்கும் செங்கரும்பில் இனிப்பைக் காணேன்
என்னசுகம் இதுவோஎன் றேங்கக் காணேன்
இசைக்கு மோர் இருள் வண்ணக் குயிலைக் காணேன்
அன்னஅசை செந்தமிழின் அழைக்கு மோசை
அடடா அங்கில்லை முழு நிசப்தங் கண்டேன்

(மூன்றாமவன்)
மின்னுகின்ற விண்மீன்கள் துடிப்பைக்கண்டேன்
மேகமெலாம் கலைந்தோடி அஞ்சக் கண்டேன்
செந்தணலும் நீர்பட்டு தணியக் கண்டேன்
சேதிசொலும் முரசங்கள் உறங்கக் கண்டேன்
சந்தமின்றி சொற்கவிதை சரங்கள் போலும்
சற்றுமிழையா மனிதர்வாழ்வைக் கண்டேன்
மன்னர் பரி வாரங்களும் மறையக் கண்டேன்
மாதவளின் புன்னகையில் துயரைக் கண்டேன்

(பொது)
சொன்னநிலை மாற்றிடவே சிந்தை கொள்வீர்
சோதிபலங் கொண்டுகிழக் கெழுதல் காண்பீர்
பொன்னிறத்து கதிர் வயலில் பொலியக்காண்பீர்
புதுவெள்ளம் பிரவகித்துப் புரளக் காண்பீர்
தென்னைமர இளங்கிளிகள்  சோலையெங்கும்
தாவியெழுந் தோடிமகிழ்வாடக் காணீர்
என்னவென மாந்தர் மனம் வியந்தேயின்பம்
ஏற்றமுறும் வாழ்வுதனை எடுக்கக் காண்பீர்

விண்ணிறைந்து தாரகைகள் விழிக்கக் காண்பீர்
வெண்ணிலவு முழுவட்டம் விளங்கக் காண்பீர்
கண்ணெதிரில் பொன்மணிகள் குவிதல் காண்பீர்
கனவிலன்றி பகைபணிந்து போகக் காண்பீர்
பெண்கள் மலர் தூவிஎழில் போற்றக் காண்பீர்
பெரும் உயர்வில் கொடிஒன்று பறக்கக் காண்பீர்
மண்ணிலெழில் நல்வளங்கள் மீளக் காண்பீர்
மாசற்ற வாழ்வு கொள்ள மாந்தர் சேர்வீர் !

No comments:

Post a Comment