Thursday, August 9, 2012

ஆனந்தக் கண்ணீர் !

விழிகளில் பொழிவது மழையோ - விரிகடல்
கொழியலை மருவியுள் வருதோ - சுழல்புவி
ஒளிகொள விரைந்திடு வழியோ - தவறிடக்
களியுடை சுகயுகம் புகுதோ - சிறுமனம்

அழகிய நடமிடும் மயிலோ - அநுபவம்
குளமதில்  எழும்சிறு அலையோ - அதிலுளம்
விழிகயல் எனத்துடி கொளுதோ - இனிமையின்
வழியிடை எனைவரச் செயுதோ - புகழ்மலர்

கொழுவிய பெருந்தொடை இதுவோ - மணந்தரு
செழுமையிற் கிறங்குது மனமோ - குளிரிட
விழுவது எதுநிகர் பனியோ - சொரிகிற
பொழுதினில் பெரிதுயர் முகிலோ - விலகிட

எழுவது விடியலின் ஒளியோ - குளிர்விடத்
தழுவுது சுடுமிளங் கதிரோ - உடனணை
பழகுதென் றலுமயல் வருதோ- சிலையெனப்
பொழிவது எனைநினை வுளியோ - அடஅட

தெளிவது கயல்புகு புனலோ - புதுமையென்
றொளிதரு பளிங்கெனும் உருவோ - இனிமையைப்
பொழிந்திட வருமிசை நெகிழ்வோ - அதைவிடப்
பிழிந்திடுங் கனிரசம் இனிதோ - மகிழ்வினை

மொழிந்திடத் தமிழ்தனி அறியேன் - ஒருபதம்,
களிகொளும் உணர்விது பெரிதாம் - அதனிடை
பொழிபுகழ் மதுரச மழையாம் - இதைவிட
அளியுயர் பதவியொன் றிலையே ,வாழிய!

1 comment:

  1. /// எழுவது விடியலின் ஒளியோ - குளிர்விடத்
    தழுவுது சுடுமிளங் கதிரோ - உடனணை
    பழகுதென் றலுமயல் வருதோ- சிலையெனப்
    பொழிவது எனைநினை வுளியோ - அடஅட ///

    அருமை வரிகள்...


    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

    ReplyDelete