Saturday, August 4, 2012

எழு உணர்வே, நீ எங்கே!


ஒளியேற்றி விழிமீது எழிலூறும் கரம்கொண்டு
உயிரென்று தமிழ் தூக்கினேன்
நெளிந்தோடும் நுதல்மீதில் வழிகின்ற ரத்ததில்
நனைந் தெந்தன் விரல்காண்கிறேன்
களிகூடித் தமிழோடு கதைபேசி விளையாடும்
கவிகொண்டு அதை நாடினேன்
பொழிகின்ற மழையாக அழுதேங்கித் துடிக்கின்ற
பெருஞ்சோக விழி காண்கிறேன்

மலிவென்று தமிழ்பேசி மகிழ்வோடு கவிகூறி
மலரென்று கவி பாடினேன்
பலிகொண்டு உயிர்போக பாவங்கள் பொலிந்தாடும்
பயங்கரம் கண்டேங்கினேன்
வலிகொண்டு வரும் ஏதும்  வழிஉண்டோ உயிர்தப்ப
வாயற்ற குரல் கேட்கிறேன்
எலிகொண்ட திணறல்கள் அறியாமல் விளையாடும்
இடர்பூனை பல காண்கிறேன்

இனிப்போதும் எழுந்தோடு இடர் கொண்ட தமிழ்பாடு
எனும் ஓசைவான் கேட்கிறேன்
தனியாக இருந்தேனும் தவழ்கின்ற காற்றோடு
தமிழ் கொண்ட நிலை கூறுவேன்
 புனிதத்தின் புயலாக பொதுவீரம் கொண்டேகும்
புதுவேகம் எழக் காண்கிறேன்
மனிதத்தின் மரணத்தை தரும்பேய்கள்: செயல்கூற
மழைவெள்ளமாய் பொங்குவேன்

உயிர்போக அழகென்ற உணர்வோங்கக் கவிபாடும்
உணர்வே நீ எனை நீங்கிடு
கயிறொன்று கழுத்தோடு உடன்காணச் சங்கீதக்
கலைபோற்றும் மனம் போய்விடு
 பயிர்போலும் விளைவாகும் பாலர்கள் கொலைசெய்யும்
பச்சைகள் தனைப் பாடவும்
 வயிரத்தின் தன்மைக்கு வழிகொள்ளும் செயல்செய்த
வலிதோரை மனம் போற்றிடு

No comments:

Post a Comment