Monday, August 6, 2012

நம்பிக்கை


வானமடி வான் சரிந்து வீழ்ந்துடைந்த தென்றலறி
   வாழ்விற் திகில் கொண்டவர்களே
ஆனபெருங் கடமைகளை ஆக்கலது அற்று பெரும்
   அடிவானம் வீழ்ந்ததே யென்று
தேனமுதச் செல்லமலர்ச்  சிறுமைகளில் மனமுழன்று
   திரிவதனை விட்டேவாரும்,
வானமழை பூவொழுக வந்தவராம் தேவர்களும்
   வாழ்த்துரைக்க வாழ்ந்துபார்க்கலாம்

ஆனையொரு அடிமிதிக்க அடர்ந்தபசும் புல்வழுக்க
 அடிசறுக்கி வீழ்ந்தது ஐயோ
போனதுவோ உயிர்பிழைத்து பெருநடையும் திரும்பிடுமோ
  பிளிறலதும் உண்டோ வென்று
ஊனமுடை நினைவெழுந்து உள்ள மலர்க் காவழிய
  உண்மைகளை உடைத்து வீழ்த்திச்‌
சேனை வகை யில்லை எனச் சிறுமை கொள்ளா தெழும் நடவும்,
  சிறந்ததொரு வாழ்வு காண்போம்!

நீரிலிடை ஓடுமலை நிறுத்தவெனப் புறப்பட்டீர் 

   நெஞ்சத்து இனியோர்களே
சேரி(இ)மயச் சிகரமதைச் சூழ்முகிலும் கலையுமங்கு
  சூரியனை நிறுத்திட வென்று
ஓரிரவு முழுதோடும் உயர்வானத் திங்கள் முகம்‌
  உள்ளகரும்‌ மறைநீக்கிட
வாரி யடித் தெழுந்தோடி வாழ்விலதென் றாகிமனம்
  வாடாதீர் வாழ்ந்து பார்ப்போம்

No comments:

Post a Comment