Tuesday, May 29, 2012

தேர் கொண்டு வந்தான் தேவன்


தேரில் ஏறென்றான் தேவன் - ஏதும்
தெரியாத வன்போலும் திரும்பிநான் நின்றேன்
வாரியே பூக்கொண்டு வீசி - நீயும்
வாழ்ந்தது போதும்வா வந்தேறு என்றான்
பாரங்கு என்றனன் வானில் - அங்கு
பார்த்தேன்ஓர் வெள்ளியோ பொன்னாக மின்ன
ஏதது தாரகை என்றேன் - ஆகா
இன்பமாம் மேலுல கிதுவென்று சொன்னான்

நீரூறும் கண்களைக் கொண்டு - நானும்
நெஞ்சினில் அன்பினைக் காட்டாயோ என்றால்
வேரறுத் தென்னையும் வீழ்த்தி - அவன்
வேடிக்கை செய்துமே விளையாடி நின்றான்
நோயுறு தேகமும் கொண்டு - இங்கு
நிற்கவும் ஆகாது நொந்தனே என்றால்
காயமே பொய்யடா என்று - கையும்
காட்டியவ் வானிடை ஏறுநீ என்றான்

பாரடா தோள் மீதுபாரம் - என்னில்
பாசமாய் உள்ளவர் எத்தனை காணாய்
ஊரடா முற்றிலும் அன்பே - கொண்டு
உள்ளது காணென்று உற்றதைக் கூறும்
போதிலென் னெதிர் நின்ற தேவன் - என்னைப்
பின்னும் நலிந்திடப் பண்ணியே துன்பம்
ஈரமென் றில்லாத உள்ளம் -கொண்டு
இம்சித்த வேதனை எப்படிச் சொல்வேன்

பாயில் கிடஎன்று  தள்ளி  - எனைப்
பாடாய் படுத்தியே பொல்லாப்புச் செய்தான்
தாயிலும் நல்லவ னன்றோ - நீயும்
தந்ததை கொண்டிட ஏனிந்த வம்போ
வாயில் சினம்கொண்டு சொன்னேன் அவன்
வாழ்ந்த உன் மேனியில் காதல்கொண்டாயோ
பேயிலும் இழிவான  பிறவி - இன்னும்
பேராசை கொண்டிடப் போனதேன் புத்தி

நாளொன்றில் மானிடா செத்தால் - பிணம்
நாற்றமும் வீசிட நாய் கொண்டுபோகும்
தோளிலே நாலுபேர் தூக்கி - மேனி
தீயில் எறிந்திடச் சாம்பலென்றாகும்
ஊழியோ உன்வினை தானோ - உன்
உள்ளமேன் ஏங்குது மோகத்தில் நீயோ
கேளிதை வானம்நீ வந்தால் - அங்கு
தீயாக மாறியே திகழலாம் என்றான்

சொல்வதைக் கேட்கவோ அன்றி -அது
சொர்க்கமோ நரகமோ சுத்தமாய் அறியேன்
கொல்வது என்றுதான் வந்தான் - பின்
கொள்வதற் காயவன் என்னவும் சொல்வான்
”அல்லன எண்ணுதல் வேண்டா - அட
அற்பனே நீ நிற்ப தென்னென்று கொண்டாய்
இல்லையாம் இன்னொரு நரகம் - காண்
இப்புவி தானுந்தன் சொல்லினில் நகரம்

கொள்வது எல்லாமும் துன்பம் - வானில்
கொட்டும் மழைகாணும் மின்னல்போல் இன்பம்
அள்ளிவீ சும்புயற் காற்று - அது
ஆக்கும் துயர்விடப் பெரிதாமுன் துன்பம்
கள்ளனும் காதகன் மூடன் - உயிர்
கொல்பவன் வன்காம லோலன் அநேகர்
உள்ளவர் ஊடு நீவாழும் -இந்த
உற்றுழல் வாழ்வினை இன்பமென்றாயோ

நில் இன்னும் ஓர்சொற்ப காலம் - வாழ
நெஞ்சினில் ஆசையும் கொண்டனன் என்றேன்
நல்லதென் கூற்றினைக் கேளாய் -பின்பு
நாளை யக்கூற்றுவன் கொள்ளவென் செய்வாய்
நல்லதோர் ஞாலம் செய்தீந்தேன் - அதை
நாளும் நரகமென் றாக்கிக் களித்தீர்
பொல்லாத புழுவென்று சேற்றில் - வாழும்
புத்தியுடைத்தனை போவென்று விட்டான்

No comments:

Post a Comment