Thursday, May 17, 2012

நிலவு சுட்டதோ?

நீதந்த நிலவென்ன சுடுகின்றதே - ஓ
 நீலத்து வான்மதியே - என்
நிழலென்ன தரைமீது விழவில்லையே -அது
 நெஞ்சத்தில் ஓர் சுமையே
பூ தந்த மணமென்ன எரிகின்றதே -ஒரு
  பொல்லாத வாசம் கொண்டே -இந்த
பூமியும் வானமும் சுழல்கின்றதே ஆகா
  பொழுதோபார் இருள்கின்றதே

நா தந்த பேச்சென்ன நடுவீட்டிலே ஒரு
  நாகம் போல் ஆடுவதோ
நல்லோரின் கைமீது பட்டிடவோ அதை
  நன்றென்றும் யார்சொன்னதோ
ஏதிந்த பாராமை என் இறைவா இன்னும்
  எத்தனை தான் உள்ளதோ
தீதென்ற எண்ணமோர் தன்மைகொண்டே -இதைத்
  தீர் என்று முன்னிற்குதோ

தீகொண்ட திக்கிலே தென்றல் எழின் அது
  தேகத்தைச் சுட்டிடுமோ
திரைகொண்ட ஆழியைத் தொட்டேகிடின் அது
 தண்மைகொண் டாகிடுமோ
மா தந்த காயும் கனியாகுமோ - என்ன
 மந்திரம் கூறுவதோ
மலரின்ம ணம்வீச யந்திரத்தை கொண்டு
   புதுவாசம் தூவுவதோ

தீவெந்த காட்டிடைத் தென்றல்தனும் ஏனோ
  தீஊத வீசுவதேன்
தேன் தமிழ் பேசிடும் சொற் கனியை கைகள்
  தீண்டாது காய்கொள்வதேன்
ஆவொன்று நின்றிடப் போவதில்லை கன்று
  அம்மா என்றே யழுதால்
போயன்பு கொண்டிடப் பார்ப்பதுண்டோ அல்ல
  பின்னின்று கொள்வதுண்டோ

No comments:

Post a Comment