Monday, May 7, 2012

வளம் தாராயோ (துதி)

வெண்பனி தூறலின் விதமென
நெஞ்சும் விழலின்றி
வீறுநினைவெழு விதமென
நடையும் விளையாயோ
புண்ணொடுசீழும் புரையுடை
நீரும் புறங்கூறும்
புன்மை பயம்கொள் பிணியுறு
வாழ்வும் வேண்டாமே

கண்ணில் விழிப்புடன் கனலுறு
விடியற் கதிரொளியின்
காணும் வெளிச்சமென் றன்புடை
வளமும் தாராயோ
உண்மை கனிந்தொரு இயல்பொடு
உள்ளம் உயர்மேவ
ஓர்மை கொடுத்துயிர் உலகிடை
வாழச் செய்யாயோ

துள்ளும் துதித்திடத் துன்பமனம்
விடத் தொலைவாகும்
தொல்லை யகன்றிடத் தொகையென
மகிழ்வும் தருவாயோ
கிள்ளி முறுக்கியே கேளழு இன்பக்
காண் சுகமும்
கொள்ளும் மனக்கிடை கொடிதெனும்
நோயைப்போக்காயோ

உள்ளி மனத்தெடு உயர்வுடை
வாழ்வும் ஒளிபொங்கும்
உத்தம மானதென் றெக்கணம்
போற்றிடும் இயல்பாக்கி
தெள்ளெனும் ஓடைதிகழ் புன
லென்னத் தன்மையுறும்
தென்பொடு நல்லுள முடையொரு
விளைவைத் தாராயோ

தகவுறு நெஞ்சும் தணிவுறு
சினமும் தாழ்மையுடன்
அக மொருஇன்பம் அணிகொள
வரமும் அருள்வாயே
புக மனதிடையே புரிவுட
னெதையும் பொறுத்தாள
முகமதை மூடும் மெதுவெனும்
இருளும் மாற்றிவிடு

மிகமன உறுதி மிதமுடன்
திறமை மகிழ்ந்தாடும்
சுகமெனும் உணர்வும் சுடுவெயி
லெனவே தீமைதனை
அகலென விலகும் அதிசிறந்
துணரும் ஆற்றலதும்
தகமையும் தந்து தரையினில்
வாழத் தா வரமே!

No comments:

Post a Comment