Wednesday, May 16, 2012

யார் பக்கம் குற்றம்?

தெள்ளெனும்நீரில் கல்லை எறிந்தால்
தொலையும் பிம்பங்கள் - ஏன்
கள்ளின் நிறமும் பாலும் ஒன்றாய்
காணும் வண்ணங்கள்
உள்ளம்மீது இல்லைகுற்றம்
எழுதும்  வார்த்தைகள் அவை
கொள்ளும் உயிரைத் குறையில் என்றால்
குற்றம் யார் கையில்?

காலச் சக்கரம் உருள்கிறது சில
காட்சிகள் மாறுவது - அந்த
நீலத்து வானிடை மேகங்களாய் அவை
நீங்கிட ஒளிதெரிது
கோலத்தைப் பார்த்தேன் தோற்றியது வான்
கதிரொளி காணுமென்று - இந்த
ஞாலத்தின் ஓட்டத்தில் நடப்பது எதுவென
நாளைக்குப் புரியும்விடு

பாலத்தைப் போடுவதாகவும் உறவினுள்
பரவசம் தெரிகிறது - மனம்
ஆலத்தைக் கொண்டவர் ஆக்கினைசெய்வது
அவசிய மற்ற தொன்று
சீலத்தை ஞாலமும் கொண்டிட பின்னொரு
சோதியு மெழுந்துகொள்ளும் - அட
ஏலத்தில் கொள்கையை விட்டவர்பாடினி
எப்படியாகும் விடு

உள்ளத்தை ஆண்டவன் உண்மை விளக்கிடும்
ஓர்கணம் தெரிகிறது-  இன்ப
வெள்ளத்தைப் போலொரு வேகம் புறப்படும்
வேலைகள் நடக்கிறது
வள்ளமும் போலொன்று வாழுயிர் காத்திட
வந்தெமை சுமந்திடுமோ - அதை
தள்ளியும்  கரை வந்து சேர்வதெப்போ மனம்
தவிப்பது தெரிகிறதே

நல்லதை எண்ணிடு நடப்பதெலாமினி
நல்ல தென்றாகிவிடும் - இனி
செல்வது நேர் நீ சென்றிடு பாதைகள்
சொர்க்கமென் றாகிவிடும்
அல்லது போய் விட ஆதவனும் பார்
அடிவான் கிழக்கிலெழும் - இனி
வல்லதென எம் வாழ்வுகிடைத்தொரு
வானம் கையில்வரும்

No comments:

Post a Comment