Friday, May 25, 2012

தமிழும் என் கவியும்




கவி என்ற தேரேறித் தமிழென்னும் உலகோடி
களிகாண மனமாகினேன்
செவி கொள்ள இனிதாகச் சிறிதேனும் பதமாக
செந்தமிழ் கவிபாடுவேன்
புவிவாழும் தமிழன்னை பொழுதேனும் மனம்கோணிப்
போகாமல் மொழி போற்றுவேன்
குவி வண்ண மலர்கொண்டு திருஅன்னை அடிபோற்றித்
தினம்தினம் துதி பாடுவேன்

கவிஎன்னும் சுவைவீணை உணர்வென்ற இழைதொட்டுக்
களிகொள்ள இசைமீட்டுவேன்
புவிமீது தமிழன்னை இருபாதம் அடிமீதில்
போயெந்தன் தலை சாத்தினேன்
குவி வானம் பொழிகின்ற மழைபோல இவன்நானும்
குளிர்கொண்ட கவி கொட்டுவேன்
செவிதானும் இனிதென்று செந்தமிழ் அன்னையவள்
சிலிர்த்தின்ப உணர்வேற்றுவேன்

பழம்தேனும்,வெல்லமுடன் பாகும் கலந்து ஒரு
பாலிட்ட மதுரசுவையில்
விழைந்தோர் கவிசெய்து வீரமகள் தேவியவள்
வேண்டுவரை ஊட்டி நிற்பேன்
குழைந்தமுது உண்டவளை கொண்டைமலர்சூட்டி
குமுத மலர்க் கால்களுக்கு
தளை சந்தமணி சிலம்பு தான்கொண்டுஎழில்கூட்டி
சாமரையும் வீசிநிற்பேன்

துள்ளியவள் ஓடிவரச் சுந்தரப் பாட்டினிலே
சொல்லாலே தாளமிட்டுத்
தெள்ளிசை தென்றலென தேகம்வருடியவள்
தாகமதைத் தீர்த்து வைப்பேன்
புள்ளினம் இசைபாடப் பூவண்டு சுதிசேர்க்கப்
பொன்மாலை இளவேனிலில்
அள்ளி ஓராயிரம் அழகான கவிசொல்லி
அழகுத்தமிழ் மகிழ்வாக்குவேன்

No comments:

Post a Comment