Monday, May 7, 2012

கவிதைக்குப் பொய்யழகு

கலையாம் மலர்கொள் சோலைகளில் - இலை
காற்றில் சலசலக்கும்
கவிதை பூக்கும் மனச்சோலை - அதில்
காட்சி சிலுசிலுக்கும்
வலையில் மீனும் சேர்ந்தாலே - அதன்
வாழ்வோ முடிந்துவிடும்
வாழ்வில் துன்பம் கொண்டாலோ - உளம்
வேதனை இசைபடிக்கும்

நிலையிக் கணமோ நிலவதனும் - ஒளி
நெருப்பாய் சுட்டெரிக்கும்
நீர்கொள் சுனையில் நிற்கும் பூ - அதன்
நிலையும் எழில்போகும்
சிலையைக் காணும் கண்கள் தான் - உளம்
சேர்ந்தே கற்பனையும்
அலையாய் எழும்போ தின்பந்தான் - அது
இருந்தால் அழகாகும்

கற்பனைக் கோட்டை இளவரசி - தமிழ்
கூறும் கவிதைகளாம்
அற்புத மரபாம் அணிகலன்கள் - அணிந்
தழகில் ஜொலித்திருப்பாள்
சொற்சுவை தேனுடன் செங்கரும்பாய் - தமிழ்
சேர்ந்தே பருகிடுவாள்
முற்றிலு மினிமை கொண்டிடுவாள் - தமிழ்
முக்கனிச் சாறுண்பாள்

சுந்தர வானின் வெண்மதியும் - அங்கு
சொட்டும் நிலவொளியாம்
மந்தநல் மாருதம் வீசிடவும் - அங்கு
மலர்கள் சிரித்திருக்கும்
செந்தமிழ் மாலைகள் சரம் தூங்கும் - ஒர்
சிலிர்ப்பை தரும் கானம்
வந்து எம்காதினில் தேன்வார்க்கும் - ஒரு
வசந்தம் மோகமிடும்

உணர்வுகள் தீட்டும் ஓவியனே - ஒரு
ஏழைக் கவிஞன் காண்
கணமே கிளரும் நினைவுகளில் - பல
கற்பனை வளம் சேர்ப்பான்
மணம்கொள் சிறிதோர் மலரொன்று- அவன்
முன்னே தெரிகிறது
வணங்கிக் கைகொள் தூரிகையால் - அவன்
வண்ணம் தீட்டுகிறான்

மலரின் இதழ்கள் செழுமையிலை - அதில்
மதுகொள் வண்டில்லை
அலர்ந்தே தெரியும் இதழ்கள்தாம் - அதில்
ஐந்தில் ஒன்றில்லை
உலரும் வண்ணம் நீர்குழைத்து - அவன்
எழுதும் போதினிலோ
பலதும் கற்பனை வளம்சேர்த்தான்- அதில்
புதிதாய் எழில் செய்தான்

செழித்துப் பெருத்த இதழ் கண்டான் - அதில்
சிந்தத் தேன் கண்டான்
வழியும் பனிநீர் துளியிருக்க - சுழல்
வண்டை மனம்கொண்டான்
நெளித்து வளையும் இதழில் தேன் - அது
நிரம்பித் துளிசிந்த
குளித்தே அழகில் கொள் செழுமை - மனம்
கொள்ளை கொண்டதுகாண்

கண்டோர் காட்சி ஓவியமாய்க் - கலை
காணும் தூரிகையால்
வேண்டுமென்றெ வண்ணங்கள் - பல
விரும்பிச் சேர்கின்றான்
தூண்டும் உணர்வை கொள்வதற்கு- அவன்
செழுமை செழுமையென
மீண்டும்மஞ்சள் பச்சை யெனத் - தொட
மிகையாய் வண்ணங்கள்

அழகுகாட்சி தெரிகிறது - அதில்
ஆகா எனவியந்து
பழகும் மாந்தர் வியந்திடினும் - அவர்
பார்க்கும் மலரெங்கும்
சுழலும் புவியில் உண்டோசொல் - அச்
சுந்தரம் பொய்யென்பேன்
நிழலாய் காணும் மெய்யின்பொய் - அவன்
நினைவின் பொய்யின் மெய்

No comments:

Post a Comment