Wednesday, May 16, 2012

உள்ளத்தில் உயர்ந்தவர்




ஒளியோ விழியோ நிலவோ சுடரோ
.  உதயச் சூரியனோ
நெளியும் அலைகள் நீந்தும்கடலின்
.  நிகரோ நெடுமலையோ
உளியோ பொழிவோ உருவில்சிலைதான்
.  உருவாக்கு மிவரோ
தெளிவோ அழகோ திரையிற் கலையைத்
.  தீட்டும் ஓவியனோ!

மழையோ முகிலோ பொழிவான் புனலாய்
.  பூமிக்கோர் வரமோ
தழையோ கொடியோ பயிரோ மனமும்
.  தளிரின் பசுமையதோ
களையோ களையும் கையோ பயிரின்
.  காவல் தெய்வமதோ
விளைவோ இயல்பாய் வேண்டும் அன்பை
.  வழங்குஞ் சுரபியென்றோ!

எழவோ விழவோ அழவோ தழுவும்
.  அன்னைக் கிணையிவரோ
நிழலோ நினைவோ நெகிழும் நெஞ்சில்
.  நிகழும் கனவிதுவோ
தழலோ அனலோ தருமம் பிழையென்
.  தகிக்கும் சூரியனோ
குழலோ இசையோ குயிலோ  கீதம்
.  கொள்ளப் பெருமையன்றோ

No comments:

Post a Comment