ஒளியோ விழியோ நிலவோ சுடரோ
. உதயச் சூரியனோ
நெளியும் அலைகள் நீந்தும்கடலின்
. நிகரோ நெடுமலையோ
உளியோ பொழிவோ உருவில்சிலைதான்
. உருவாக்கு மிவரோ
தெளிவோ அழகோ திரையிற் கலையைத்
. தீட்டும் ஓவியனோ!
மழையோ முகிலோ பொழிவான் புனலாய்
. பூமிக்கோர் வரமோ
தழையோ கொடியோ பயிரோ மனமும்
. தளிரின் பசுமையதோ
களையோ களையும் கையோ பயிரின்
. காவல் தெய்வமதோ
விளைவோ இயல்பாய் வேண்டும் அன்பை
. வழங்குஞ் சுரபியென்றோ!
எழவோ விழவோ அழவோ தழுவும்
. அன்னைக் கிணையிவரோ
நிழலோ நினைவோ நெகிழும் நெஞ்சில்
. நிகழும் கனவிதுவோ
தழலோ அனலோ தருமம் பிழையென்
. தகிக்கும் சூரியனோ
குழலோ இசையோ குயிலோ கீதம்
. கொள்ளப் பெருமையன்றோ
No comments:
Post a Comment