Wednesday, May 16, 2012

சின்ன ஆசை


பிறந்த பின்பு இருந்த வாழ்வு பெரிய கனவது - இன்று
மறந்து போன தெனிலும் காண மனது விழையுது
கறந்த பாலைக் காய்ச்சி வெல்லம் கலந்த பின்பது - ஆவின்
பிறந்த மடியில் ஏறு என்கில் போகுமோ அது?

வளர்ந்த வாழ்வில் வகைகள் நூறு வந்து போகுது - மனது
குழந்தை கண்ட உலகம்மாறிக் கொள்ள விரும்புது
இழந்த நாட்கள் திரும்பக் காண இதயம் ஏங்குது - நல்ல
பழம் கனிந்து வீழ்ந்த பின்பு கிளைக்கு ஏங்குது

எழுந்து மீண்டும் பறக்க விரும்பும் இளைத்த பறவையாய் -இன்று
ஒதுங்கி வாழும்போதும் வந்த உள்ளம் தீண்டுது
அழுங்கு கொண்ட பிடியென்றாக அற்றை நாளதின் -எண்ணம்
விழுங்கி யெங்கள் உணர்வில் மூச்சை விரையவைக்குது

செய்த தவறும் திருத்தி வாழ சிந்தை கொள்ளுது ஆயின்
சேர்ந்து போன ஆண்டு வயதை  தின்றுபோனது
நேர்ந்த துன்பம் நினைவில் வந்து போதும் என்குது .தெளிந்த
நீர்க்குளத்தில் எழுதி வைத்த நிகழ்ச்சி நிரலிது
*****************************

No comments:

Post a Comment