Monday, May 7, 2012

வீணில் பகைத்தேன்- தலைவியின் ஏக்கம்

கண்ணில் பெருங்கனவு தங்கமே தங்கம்
கண்டுமனங் களித்திருந்தேன் தங்கமே தங்கம்
எண்ணி மனத் திடையே தங்கமே தங்கம்
ஏதும்பிழை செய்தேனோடி தங்கமே தங்கம்
முன்ன ரிரிந்தபகை தங்கமே தங்கம்
முற்று மழிந்ததோடி தங்கமே தங்கம்
என்னைப் புரிந்துகொள்ள என்ன உரைத்தும்
ஏனோ தெரியாரடி தங்கமே தங்கம்

மெல்ல முகம் மறைத்த முன்னிருள் எல்லாம்
மேகமென ஓடியதோ தங்கமே தங்கம்
சொல்லி உரைத்தகதை தங்கமே தங்கம்
சொர்க்கமென்று ஆகவில்லை தங்கமே தங்கம்
பொல்லாத பூமியடி புன்னகை செய்தால்
பொய்யி தென்று பேசுதடி தங்கமே தங்கம்
மெல்ல நடப்பதென்ன மேதினி தன்னில்
மர்மா யிருக்குதடி தங்கமே தங்கம்

பொய்யை நினைத்தில்லை பேதையின்மனம்
பூட்டியும் மறைக்கவில்லை போதிலெதையும்
கையை விரித்தபின்பும் தங்கமே தங்கம்
காணுவது பொய்மை என்றார் ஏனடி இன்னும்?
செய்யத் தெரிந்ததில்லை சொல்லடி தங்கம்
சேர்த்து வைத்தேதுமில்லை சிந்தையில் எங்கும்
உய்யநினைத்து இல்லம் ஓங்க விழைந்தேன்
ஒன்றும் நடக்கவில்லை தங்கமே தங்கம்

நானும் அவரிடத்தில் தங்கமே தங்கம்
நாணும் வகை செய்தேனோடி தங்கமே தங்கம்
வானில் இருக்கும் ஒளி வெய்யவன் கண்ணை
வந்தமுகில் மறைத்திடலாம் தங்கமே தங்கம்
மாண்புதனை மாசுசெய்ய மனம் நினைத்தால்
மாண்டு விடநேருமடி தங்கமே தங்கம்
வீணில்சுடர் பகைத்து வெய்யிலொறுத்தால்
வையம்பிழைக்குமோடி தங்கமே தங்கம்

No comments:

Post a Comment