Tuesday, May 29, 2012

தமிழே தருவாயா?


தமிழோடு விளையாடித் தரநூறு கவிபாடித்
தவழ்கின்ற பெருவாழ்வு வேண்டும்
இமைமீது விழிகொண்ட உறவாகக் கணமேனும்
உனையென்றும் பிரியாமை வேண்டும்
கமழ்வாச மினிதான கனிகாணுந் தருவாக
கனம்கொண்டு இவன்சோலை யெங்கும்
திகழின்பத் தமிழான தென்றும்நற்பொலிவாகி
தினமொன்று கனிந்தாக வேண்டும்

சுவையான தெனஅன்னை தமிழோடு பயில்கின்ற
சுகமான உணர்வென்றும் வேண்டும்
அவைகூற அவையேறின் அழகென்பதென யாரும்
அதுகண்டு புகழ்கூற வேண்டும்
எவைமீதி இருந்தாலும் எதுமீறி நடந்தாலும்
உனதன்பு அதைமேவ வேண்டும்
இவைபோதும் எனவல்ல இகமீது தமிழ்போதை
எழுந்தின்ப நதிபாய வேண்டும்

குவை தங்கம் கொடிஆட்சி, குடிவாழும் ஊரென்று
எது தந்தும் பரிசாகக் கேட்டும்
அவையொன்று நிகரில்லை அரசாளத் தமிழேடும்
அதிகாரம் அதில் உண்டுபோதும்
குவிகின்ற மலர்மீது கொள்கின்ற துயில்போலும்
கலையன்னை மடிமீது சாயும்
கவினின்பக் கணம்போதும் கருதேனே பிறிதேதும்
காணென்று மனம்கூற வேண்டும்

ரவிவானில் வரும்போதி லெழுவான ஒளியாக
என்றென்றும் பிரகாசம் வேண்டும்
இரவில்வந்த நிலவாலே எழுகின்ற மனபோதை
இதனோடு இழைந்தோட வேண்டும்
சரமாலை யணியாகத் தமிழன்னை புகழேந்தி
தருகின்ற கவியாவும் என்றும்
வரமான தரவேண்டும் வளர்வொன்று தானின்றி
வழுவாத நிலைகொள்ள வேண்டும்

No comments:

Post a Comment