Wednesday, May 16, 2012

தமிழின் சுவை


 

எண்ணக் கடலிடை மின்னலடிக்குது
எத்தனை மின்பொறிகள் -அவை
எண்ண மனக்கடல் வந்து விழுகுது
இன்ப மணித் துகள்கள்
கண்ணைப் பறித்திட வீழும்பொறிகளும்
கற்பனை சொல்வளங்கள் - அதை
வண்ணமகள் தமிழன்னை அணிகொள்ள
மின்னிடும்பொன்னொளிகள்

செந்தமிழா மிந்த செம்மொழித் தோட்டத்தில்
எத்தனை வாசமலர் -அவை
எந்தநிறத்தொடும் மஞ்சள் சிவப்பென
எண்ணிச்சுகம் தருங்கள்
சந்தமுடன் கவிசொல்லிப் பழகிட
சிந்தனை கொள்வளங்கள் -அவை
எந்தவிதமென வாயினும் இன்பத்தின்
எல்லை யிலே ஒருகல்

விந்தை குளத்தினில் செந்தமிழ்தாமரை
வீறுகொண்டே சிரிக்கும் - எங்கள்
சிந்தையிலே நல்ல கிண்கிணிநாதமும்
சேரக் கிளுகிளுக்கும்
சந்தமுடன் கவி சிந்திடச் சிந்திட
சின்ன இதழ்விரியும் - இதை
எந்த மனமதும் கண்டுமலர்ந்திட
இன்பத்தமிழ் சொரியும்

இன்பத்தமிழ் அது ஈழநிலத்தினில்
எண்ணத்தில் செய்வலிகள்- தினம்
இன்னும்தமிழிசை கொண்டமனங்களில்
ஏற்றும் பெருங் கிலிகள்
சொன்னதென்ன தமிழ் சொல்வதும் குற்றமோ
செய்தவர் உயிர்கள்- விட
என்ன பிழை தமிழ் சொல்லப்பயங்கொண்டு
இன்னலில் வாழ்ந்து கெட

No comments:

Post a Comment