Wednesday, February 1, 2012

நானும் ஒருவன்

மகா வல்ல அறிஞர் குழுவுக்குள் இடம்கிடைத்தபோது...

அழகான சபையொன்று கண்டேன் - அங்கு
அசைந்தாடும் மலர் போலும் இதயங்கள் கண்டேன்
குழலோசை குயில்பாடுங் கீதம் - இளங்
குளிர்மாலைக் காற்றோ டெழுந்தோடக் கண்டேன்

கிளிபோற் குரல்கொண்டு நானும் - அங்கு
கீக்கி என்றே கத்திப் பாட்டிசைத்தாலும்
களிகொண்டு பெருநெஞ்சம் வாழ்த்தும் - யான்
கதைகூறிக் கவியென்று வதைசெய்தபோதும்

சரிபாதி நிகர்தானும் இல்லை -நான்
சரிகம பதநி அறிந்தவன் இல்லை
வரைமீறி கவிசெய்யு மென்னை - அங்கு
வாஎன்று வழிதந்த இவர்கொண்ட மேன்மை

வளைந் தோடுநதி பாதை கொள்ளும் - எங்கும்
வளையாத நதிமோதித் துளியாகி வீழும்
களைநீங்கப் பயிரோடி ஓங்கும் - எம்
கலைகொண்ட உளம்தானும் மகிழ்வொன்றே காணும்

சினங்கொண்ட வெயிலோடி வீழும் - மீண்டும்
செந்தமிழ் பொன்மதி வானிலே தோன்றும்
மனங்களில் நாமெறிந்தாடும் - நல்ல
மலர்கொண்ட கணைநெஞ்சில் மணம் தந்துபோகும்

மகிழ்வாக மனமின்று துள்ளி - ஒரு
மாற்றான அனுபவம் கொள்ளுதேயள்ளி
புகழோடு வழிகாட்டல் சொல்லி - என்னைப்
புடம்போடச் செய்தவர்க் கொருகோடிநன்றி

காற்றோடு மலர்கொண்ட வாசம் - நற்
கனியோடு சுவை கொண்ட காதலும் நீரின்
ஊற்றோடு குளிர் கொண்ட நேசம் - இவை
உளதானவரை நானும்ஓய்வெனக் கொள்ளேன்

ஆர்ப்பரித் தெழுமாழி அலைகள் - ஆக
ஆயிரம் உணர்வுகள் அகம்மீது உண்டு
நீர்த்துளி வீழுதல் போலே - என்
நெஞ்சத்தின் எண்ணங்கள் நிச்சயம்வீழும்


No comments:

Post a Comment